மகனை பார்க்க மலைக்க வைக்கும் பயணம்


மகனை பார்க்க மலைக்க வைக்கும் பயணம்
x
தினத்தந்தி 20 May 2018 7:26 AM GMT (Updated: 20 May 2018 7:26 AM GMT)

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தங்கள் மகனை சந்திப்பதற்காக ஒரு வருடமாக சைக்கிளில் சென்றிருக்கிறார்கள்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தங்கள் மகனை சந்திப்பதற்காக ஒரு வருடமாக சைக்கிளில் சென்றிருக்கிறார்கள். ஒரு தம்பதியர். அவர்கள் பெயர் கைடோ ஹுவய்லர்- ரீட்டா. இவர்கள் சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர்கள். இவர்களுடைய மகன் ஹசர், தென் கொரியாவில் சமீபத்தில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டார். ரீட்டா, ஹசரின் வளர்ப்பு தாய். மகனை உற்சாகப்படுத்துவதற்காக ஹுவய்லர்- ரீட்டா இருவரும் அங்கு செல்ல முடிவெடுத் தனர். ஆனால் விசா கிடைக்கவில்லை. இதையடுத்து சாலை மார்க்க தங்கள் பயண திட்டத்தை வகுத்திருக்கிறார்கள். அதற்கு சைக்கிளை பயண வாகனமாக பயன் படுத்திவிட்டார்கள்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சுவிட்சர்லாந்தில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கினார்கள். 20 நாடுகள் வழியாக இவர்களின் சைக்கிள் பயணம் தொடர்ந்திருக்கிறது. 17 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை இருவரும் சைக்கிளில் கடந்துவிட்டார்கள். நெடும் பயணத்திற்கு பிறகு ஒலிம்பிக் மைதானத்தை சென்றடைந்து மகனை சந்தித்து பேசியிருக்கிறார்கள். மகன் தங்களுடைய வருகைக்காக காத்திருந்தது பயணத்தில் ஏற்பட்ட சிரமங்களை மறக்கடித்துவிட்டது என்கிறார்கள்.

‘‘ஒரு வருடமாக தினமும் சைக்கிள் ஓட்டுவது மிகவும் கடினமாக இருந்தது. ஆப்கானிஸ்தான் வழியாக செல்லும் பாமிர் நெடுஞ்சாலை வழியாக பயணம் செய்தது மிகவும் சவாலான விஷயமாக இருந்தது. இது 4000 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த நெடுஞ்சாலை பல மத்திய ஆசிய நாடுகளை கடந்து செல்கிறது. அதன் வழியே சென்றபோது நாங்கள் மிகவும் களைப்படைந்து விட்டோம். இனி இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை ஓய்வு எடுத்தால்தான் பயண அலுப்பு நீங்கும்’’ என்கிறார், ஹுவய்லர்.

இந்த சைக்கிள் பயண அனுபவம் மேலும் பல நாடுகளை சுற்றிப்பார்க்கும் ஆர்வத்தை இவர்களிடம் தூண்டியிருக்கிறது. அதற்கேற்ப புதிய பயண திட்டங்களை வடிவமைத்துவருகிறார்கள்.

Next Story