பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்


பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x
தினத்தந்தி 20 May 2018 10:30 PM GMT (Updated: 20 May 2018 7:07 PM GMT)

நீர்மட்டம் குறைந்ததால் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது.

இதில் பூண்டி ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம். புழல் ஏரியில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு வட சென்னையிலும், செம்பரம்பாக்கம் ஏரியில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு தென் மற்றும் மத்திய சென்னை பகுதியிலும் வினியோகிக்கப்படுகிறது.

1983-ம் ஆண்டு தமிழக அரசு ஆந்திர அரசுடன் செய்து கொண்ட தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தத்தின்படி ஆந்திர அரசு தமிழகத்துக்கு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.

அதன்படி ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீர், ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

கடந்த டிசம்பர் மாதம் 27-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு மார்ச் 26-ந்தேதி நிறுத்தப்பட்டது. இந்த இடைபட்ட நாட்களில் 2.280 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது.

கண்டலேறு அணையில் தண்ணீர் வரத்து காரணமாக பிப்ரவரி மாதம் 27-ந்தேதி பூண்டி ஏரியில் இருந்து லிங்க் கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

புழல் ஏரியில் போதுமான தண்ணீர் இருப்பு இருந்ததால் கடந்த மாதம் 20-ந்தேதி பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 21-ந்தேதி செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு அதிகபட்சமாக 550 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

பூண்டி ஏரியின் நீர் மட்டம் 35 அடியாகும். 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். கோடை வெயில் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வந்தது. நேற்று தண்ணீர் மட்டம் 19.30 அடிக்கு குறைந்து விட்டது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

பூண்டி ஏரியில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி வெறும் 191 மில்லியன் கனஅடி தண்ணீர்தான் இருப்பு உள்ளது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் மூலம் வினாடிக்கு 19 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

Next Story