கம்பம் பகுதியில் அனுமதி பெறாத கட்டிடங்களால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு


கம்பம் பகுதியில் அனுமதி பெறாத கட்டிடங்களால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு
x
தினத்தந்தி 20 May 2018 11:00 PM GMT (Updated: 20 May 2018 7:20 PM GMT)

கம்பம் பகுதியில் அனுமதி பெறாத கட்டிடங்களால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கம்பம்,

கம்பம் நகர் பகுதியில், அனுமதி பெறாத கட்டிடங்களால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில், வளர்ந்து வரும் நகரில், கம்பம் நகராட்சியும் ஒன்றாக உள்ளது. தமிழக-கேரள எல்லைக்கு அருகே உள்ளதால் வணிக ரீதியான நகரமாகவும் விளங்குகிறது. 33 வார்டுகளை கொண்ட கம்பம் நகராட்சியில் விரிவடைந்த பகுதிகளாக கிருஷ்ணாபுரம், கம்பம்மெட்டு காலனியின் மேற்குபுறம், பாரதியார் நகர், மாலையம்மாள்புரம், காந்திநகர், நந்தனார் காலனி, நகராட்சி வாரச் சந்தையின் வடக்கு பகுதிகள் உள்ளன. மேலும் பழைய பஸ்நிலைய சாலை, அரசமர வீதி, காந்திசிலை பகுதி, உழவர்சந்தை பகுதி, மஞ்சணக்காரத்தெரு, பிரதான சாலை ஆகியவற்றில் வணிக வளாகங்கள் அதிக அளவில் உள்ளன.

கம்பம் நகர் பகுதியில் வீடு மற்றும் கடைகள் கட்டும் போது, நகராட்சியிடம் முறையாக மனு கொடுத்து, வரைபடம் பெற்று கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும். அதற்கேற்றார் போல் நகராட்சியின் வருவாய்த்துறை சார்பில் சொத்துவரி நிர்ணயம் செய்யப்படும். ஆனால் நகரின் பல இடங்களில் அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இவற்றில் கூடுதலாக கட்டிடங்களை கட்டுவது, குடியிருப்பு பகுதிகளில் வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நடத்துவது போன்ற விதிமீறல் செயல்கள் தொடர்ந்து வருகின்றன.

இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் சென்றும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகராட்சியிடம் உரிய அனுமதி பெறாத கட்டிடங்களால் பாதிக்கப்பட்டவர்கள், நீதிமன்றங்கள் மூலம் வழக்கு தொடர்வதும், அதற்கு நகராட்சி நிர்வாகம் ஆஜராவதும் தொடர்கதையாக உள்ளது. இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கு நிதிஇழப்பு மற்றும் கால விரயமும் ஏற்படுகிறது.

மேலும் அனுமதி பெறாத கட்டிடங்களால் நகராட்சிக்கு கிடைக்க வேண்டிய சொத்துவரி உள்ளிட்டவை கிடைக்காமல், வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. எனவே மண்டல நகராட்சிகளின் நிர்வாகம், இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, கட்டிடங்கள் கட்டுவதற்கு முறையான அனுமதி பெறவும், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உரிய இடத்தில் இயங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story