நயினார்கோவில் அருகே பெண் கழுத்தை அறுத்து படுகொலை கணவர் போலீசில் சரண்


நயினார்கோவில் அருகே பெண் கழுத்தை அறுத்து படுகொலை கணவர் போலீசில் சரண்
x
தினத்தந்தி 20 May 2018 10:15 PM GMT (Updated: 20 May 2018 7:46 PM GMT)

நயினார்கோவில் அருகே பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் போலீசில் சரணடைந்தார்.

நயினார்கோவில்,

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா நயினார்கோவில் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 46). இவருடைய மனைவி மாலா (45). இவர்களுக்கு கோகுல செல்வம்(15) என்ற மகனும், பிரியதர்சினி(12) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் ராமச்சந்திரனுக்கு சந்தேகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மனைவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்த ராமச்சந்திரன் நேற்று தனது மனைவியை ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள கருவேல புதருக்கு அழைத்து சென்று கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அவர் நயினார்கோவில் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

உடனே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த மாலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிந்து ராமச்சந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் நயினார்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story