அரியலூர் மாவட்டத்தில் முதல் தலைமுறையினர், மானியத்துடன் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்


அரியலூர் மாவட்டத்தில் முதல் தலைமுறையினர், மானியத்துடன் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 20 May 2018 10:30 PM GMT (Updated: 20 May 2018 9:48 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் முதல் தலைமுறையினர், மானியத்துடன் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.

அரியலூர்,

தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் முதல் தலைமுறையினர் புதிய தொழில் தொடங்குவதற்காக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் புதிய தொழில் தொடங்க ஆர்வமுள்ள முதல் தலைமுறையினை சார்ந்த படித்த இளைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் தொடங்க ஊக்கப்படுத்துவது ஆகும்.

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க பொது பிரிவினருக்கு 21 முதல் 35 வயது முடியவும், சிறப்பு பிரிவினருக்கு 21 முதல் 45 வயது முடியவும் இருக்க வேண்டும். கல்வி தகுதியாக பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ. அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழில் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தமிழ் நாட்டில் கடந்த 3 ஆண்டுகள் தொடர்ந்து வசிப்பவராக இருக்க வேண்டும். வருமான உச்ச வரம்பு இல்லை. ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் கூட்டாக சேர்ந்து பங்குதாரர்கள் நிறுவனமாகவும் தொடங்கலாம். www.msm-e-o-n-l-i-ne.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு இயங்கும் மாவட்ட அளவிலான தேர்வுக்குழுவால் பரிசீலிக்கப்பட்டு தொழில் முனைவோர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இத்திட்டம் தொடர்பாக மாற்றியமைக்கப்பட்ட புதிய அரசாணையின் மூலமாக ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை முதலீட்டில் தொடங்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கு 25 சதவீதம் மானியம் கணக்கிட்டு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் அளிக்கப்படும். மேலும் வங்கி கடனில் 3 சதவீதம் வட்டி பின்முனை மானியமும் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்ட தொழில் மையம் மூலம் 12் தொழில் முனைவோர்களுக்கு ரூ.1.20 கோடி மானியமும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் 3 தொழில் முனைவோர்களுக்கு ரூ.30 லட்சம் மானியமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் www.msm-e-o-n-l-i-ne.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து மானியம் பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

Next Story