மளிகை பொருட்கள் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு


மளிகை பொருட்கள் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
x

பாளையங்கோட்டை அருகே மளிகை பொருட்கள் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை,

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் விஜய துர்காபுரி நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவருடைய மனைவி அமராவதி (வயது 44). இவர்கள் வீட்டின் அருகில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கடையில் அமராவதி வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது 2 மர்ம நபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

இதில் ஒருவர் கீழே இறங்கி கடைக்கு வந்தார். மற்றொருவர் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்காமல் இருந்தார். கீழே இறங்கி வந்தவர் கடையில் மளிகை பொருட்கள் வாங்குவதாக கூறி விலையை விசாரித்தார். அவருக்கு அமராவதியும் மளிகை பொருட்களின் விலையை ஒவ்வொன்றாக கூறி கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று அவருடைய கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை அந்த நபர் பறித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கடையை நோக்கி ஓடிவந்தனர். ஆனால், அதற்குள் அந்த நபர் சங்கிலியுடன் ஓடிச் சென்று ஏற்கனவே தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறினார். உடனடியாக அந்த 2 பேரும் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தினர். அவர்களை சிலர் சிறிது தூரம் விரட்டி சென்றனர். ஆனால் அந்த 2 பேரும் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தி தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை, பாளையங்கோட்டை பகுதியில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளுக்கு 3 கொள்ளையர் வீதம் துணிகரமாக நடமாடி வருகின்றனர். குறிப்பாக பாளையங்கோட்டை பஸ்நிலையம், மார்க்கெட், ஐகிரவுண்டு, கே.டி.சி.நகர், புதிய பஸ்நிலையம், குலவணிகர்புரம், சமாதானபுரம், வண்ணாரப்பேட்டை, முருகன்குறிச்சி, புறவழிச்சாலை பகுதிகளில் தினமும் கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் வலம் வருகின்றனர். ஹெல்மெட் அணியாமல் துணிச்சலாக வலம் வந்து பொதுமக்களிடம் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது நெல்லை மாநகர பொதுமக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூர் பயணிகளுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. மாநகர போலீஸ் கமிஷனர் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி மேற்கண்ட பகுதிகளில் இரவு நேர போலீஸ் ரோந்து பணியை தீவிரபடுத்தி கொள்ளையர்களை கூண்டோடு பிடித்து நடமாட்டத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story