ஆம்பூர் அருகே ஏரியில் ஆயிரக்கணக்கான மீன் குஞ்சுகள் செத்து மிதந்தன


ஆம்பூர் அருகே ஏரியில் ஆயிரக்கணக்கான மீன் குஞ்சுகள் செத்து மிதந்தன
x
தினத்தந்தி 21 May 2018 11:00 PM GMT (Updated: 21 May 2018 10:11 PM GMT)

ஆம்பூர் அருகே ஏரியில் ஆயிரக்கணக்கான மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்பூர்,

ஆம்பூர் அருகே உள்ள பெரியவரிகத்தில் 320 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக ஏரியில் இன்னுமும் தண்ணீர் உள்ளது. ஏரியில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது ஆடு, மாடுகளை மேய்த்து வருகின்றனர். மேய்ச்சலுக்கு பின்னர் ஆடு, மாடுகள் அந்த ஏரியில் உள்ள தண்ணீரை குடிப்பது வழக்கமாக இருந்துள்ளது.

இந்த நிலையில் அந்த ஏரிப்பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலைகளின் தோல் கழிவு பொருட்கள் அங்கு கொட்டப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆடு முடிகளை அங்கு மலை போல் கொட்டி வைத்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக தோல் கழிவு பொருட்களில் இருந்து வெளியேறிய நீர் ஏரியில் கலந்துள்ளது. தோல் கழிவு பொருட்களில் இருந்த விஷ நீரால் ஏரியில் இருந்த ஆயிரக்கணக்கான மீன் குஞ்சுகள் செத்து மிதந்தன. மேலும் ஏரியில் தோல் கழிவு பொருட்கள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

நேற்று அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வருவாய்த்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

தோல் கழிவுநீரால் ஆயிரக்கணக்கான மீன் குஞ்சுகள் செத்து மிதப்பது அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ஏரியில் தோல் கழிவு பொருட்களை கொட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஏரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story