அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் போராட்டம்


அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி  கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 22 May 2018 10:15 PM GMT (Updated: 22 May 2018 7:56 PM GMT)

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்

விருத்தாசலம் அருகே உள்ள மு.பரூர் கிராமத்தில் குடிநீர், சாலை, மின்விளக்கு வசதி உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதுபற்றி தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கிராம மக்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசனிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

விருத்தாசலம் அருகே மு.பரூர் கிராமத்தில் கல்சிகுட்டை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இப்பகுதி மக்களின் தேவைக்காக இதுவரை குடிநீர், சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.

நாங்கள் வெகு தொலைவில் உள்ள காலனி பகுதிக்கு நடந்து சென்று, தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தி வருகிறோம். எங்கள் பகுதியில் பொது குழாய்கள் அமைத்து குடிநீர் வசதி செய்து தரவேண்டும். மேலும் சாலை, மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை ஏற்ற கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story