தினம் ஒரு தகவல் : நிச்சயதார்த்த மாத்திரை


தினம் ஒரு தகவல் : நிச்சயதார்த்த மாத்திரை
x
தினத்தந்தி 23 May 2018 9:39 AM GMT (Updated: 23 May 2018 9:39 AM GMT)

நிச்சயதார்த்த மாத்திரை என்ற பெயரைக்கேட்டதும் பலரும் இது ஆண்மைக்கான சமாச்சாரம் என்று நினைக்கலாம். ஆனால், இது பெண்களுக்கான ஒன்று.

பெண்களுக்கு மட்டுமல்ல. வருங்கால சந்ததிகளை ஆரோக்கியமாக உருவாக்க அவசியமான ஒன்று. நமது நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் 3 சதவீதத்தினர் பிறவிக் கோளாறுடன் பிறக்கின்றனர். மூளை வளர்ச்சி இல்லாமல் பிறப்பது, மூளையில் நீர் கோர்ப்பது, குடல் வெளியில் இருப்பது, சிறுநீரகங்கள் இல்லாமல் பிறப்பது, கை, கால் எலும்பு வளராமல் இருப்பது. இப்படிப்பட்ட குழந்தைகள் நீண்ட நாள் உயிர்வாழ முடியாது.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்ற அதிநவீன மருத்துவக் கருவிகள் கூட 70 சதவீத குறைகளை மட்டுமே கண்டுபிடிக்க உதவுகின்றன.மீதி 30 சதவீத குறைகளை கண்டுபிடிக்கவே முடியாது. காது கேளாமல் இருப்பது போன்ற பிறவிக் கோளாறுகள் வளரவளரத்தான் தெரியும்.

ஸ்கேன் என்பது உயிரைப் பாதிக்கும் பிரச்சினைகளை மட்டுமே கண்டுகொள்ள முடியும் என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்.

சரி, பிறவிக் கோளாறு எப்படி வருகிறது? அதற்கு மரபு ரீதியிலான, சுற்றுச்சூழல் என்று ஏகப்பட்ட காரணங்களை மருத்துவம் சொன்னாலும், மனக் கோளாறு, முதுகுத் தண்டு பிரச்சினைகளுடன் பிறக்கும் குழந்தைகள்தான் அதிகம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், இந்தப் பிறவிக் கோளாறை பெண்கள் நினைத்தால் தங்கள் குழந்தைகளுக்கு வராமல் தடுக்க முடியும் என்கிறது, மருத்துவம். இந்தக் குறைபாட்டுடன் குழந்தைகள் பிறக்க போலிக் ஆசிட் குறைவாக இருப்பதே காரணம்.

மிகக் குறைவான விலையில் கிடைக்கும் போலிக் ஆசிட் மாத்திரைகளை பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே பிறவிக் கோளாறுடன் பிறக்கும் குழந்தைகளை 60 சதவீதம் தவிர்க்க முடியும்.

இந்தியா தவிர உலகம் முழுவதும் பெண்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்கிறார்கள். நமது நாட்டில் கூட பருவமடைந்த வளரிளம் பெண்களுக்கு அரசுப் பள்ளிகளில் இரும்புச் சத்து மாத்திரையுடன் சேர்த்து போலிக் ஆசிட் மாத்திரையும் இலவசமாக கொடுக்கிறார்கள். ஆனால், பெண்களுக்கு திருமணம் என்பது 20 வயதுக்கு மேல்தானே நடக்கிறது.

கர்ப்பம் அடைந்த பெண்ணுக்கு போலிக் ஆசிட் மாத்திரையை மருத்துவர்கள் கொடுப்பார்கள். ஆனால், அதற்கு முன்பே கர்ப்பத்திற்கு தயாராகும் போதே பெண்ணின் உடலில் போலிக் ஆசிட் போதுமான அளவு இருந்தால் பிறவிக் கோளாறுடன் குழந்தை பிறப்பதை தவிர்க்க முடியும். அதனால்தான் வெளிநாட்டுப் பெண்கள் திருமணத்துக்கு தயாராகும்போதே போலிக் ஆசிட்டை எடுத்து கொள்கிறார்கள். அதனால்தான் போலிக் ஆசிட் மாத்திரைக்கு ‘என்கேஜ்மெண்ட் பில்’ என்ற பெயரை மேலைநாட்டினர் வைத்தார்கள்.

நமது நாட்டிலும் பெண்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நாளில் இருந்து போலிக் ஆசிட் என்ற நிச்சயதார்த்த மாத்திரையை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் பிறவிக்கோளாறு இல்லாத ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கமுடியும்.

கரு, உருப்பெறும் போதே போதிய அளவு போலிக் ஆசிட் பெண்ணின் உடலில் இருக்க வேண்டும் என்பதை ஆண்களும் தங்களின் வருங்கால மனைவிக்கு சொல்லி சாப்பிட வைப்பது, பின்னாளில் ஏற்படும் பல பிரச்சினைகளை தீர்த்து வைக்கும். 

Next Story