விலை மதிப்பில்லா உயிரை விபத்தில் இழக்கலாமா?


விலை மதிப்பில்லா உயிரை விபத்தில் இழக்கலாமா?
x
தினத்தந்தி 23 May 2018 9:45 AM GMT (Updated: 23 May 2018 9:45 AM GMT)

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தங்கநாற்கர சாலைகளுக்கான திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. பிறகு, நாடு முழுவதும் நான்கு வழிச்சாலைகள் மக்களின் பயன்பாட்டுக்கு வந்து விட்டன.

போக்குவரத்து இதனால்  எளிமையாகி இருக்கிறது. பயண நேரமும் வெகுவாக குறைந்து விட்டது.

முன்பு இருந்த சாலைகளுக்கும் இப்போது தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்பட்ட பின்னர் சாலையின் தரம் உயர்ந்து உள்ளது. இதனால் பயணமும் சொகுசாகி உள்ளது. இதன் காரணமாக இன்று அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் வாகனங்கள் அணிவகுத்து செல்வதை பார்க்க முடியும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தினை தடுக்கும் வகையில் சாலையில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளன. எதிரெதிரே வந்து முட்டி மோதிக் கொண்டு இருந்த வாகனங்கள் இருவழிச்சாலை, நான்கு வழிச்சாலை வந்த பிறகு போவதற்கு ஒரு சாலை, வருவதற்கு ஒரு சாலை என பிரிக்கப்பட்டது. ஆனாலும் விபத்துகள் குறைந்தபாடில்லை என்பதுதான் வேதனை.

தேசிய நெடுஞ்சாலைகளில் தினமும் ஏதாவது ஒரு இடங்களில் விபத்து நடந்து மனித உயிர்கள் மடிந்து வரும் சம்பவம் நம்மை ஒவ்வொரு நாளும் அதிர்ச்சி அடைய செய்கின்றது. தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்கு காரணமாக இருப்பது அதிவேகம் தான். சில நேரங்களில் டிரைவர்களின் அலட்சிய போக்கும் காரணமாக இருக்கிறது.

சமீப காலமாக தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துகளை நாம் தொடர்ந்து ஆய்வு செய்து பார்த்தோம் என்றால், சாலையின் தடுப்புச்சுவரில் வாகனம் மோதி எதிர் திசையில் வரும் வாகனம் மீது விழுந்து இரண்டு பக்கமும் மிகப்பெரிய உயிர்சேதத்தை ஏற்படுத்தும் சம்பவங்களாக தான் இருக்கின்றன.

சமீபத்தில் கரூரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தனது குடும்பத்தினருடன் மதுரைக்கு தானே காரை ஓட்டிச் சென்ற போது சாலையின் தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த குடும்பத்தில் 2 பேர் பலியானார்கள். இதே போன்று கடந்த 10-ந் தேதி இரவு திருச்சியில் இருந்து முன்னாள் ராணுவ வீரர் சக்திசரவணன் கடலூருக்கு காரை ஓட்டிச் சென்ற போது அந்த கார் பெரம்பலூர் நான்குவழிச்சாலையில் சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது.

பின்பு எதிர் திசையில் காஞ்சீபுரத்தில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற கார் மீது போய் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காஞ்சீபுரத்தில் இருந்து காரில் வந்த 9 பேரும் பலியானார்கள். இப்படி கொடூர விபத்துகள் தினந்தோறும் நடந்து வருவது மிகவும் வேதனை அடைய செய்து உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் கார் ஓட்டிச் செல்பவர்கள் சாலையின் வலது, இடது பக்கமாக செல்வார்கள். சாலையில் வலது பக்கம் தான் சாலையின் தடுப்புச்சுவர் அமைந்து உள்ளது. இப்படி சாலையின் வலது பக்கமாக சாலையின் தடுப்புச்சுவரை ஒட்டி கார் ஓட்டி செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்வது அவசியம்.

தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் கார்களின் வேகம் குறைந்தது 100 கிலோ மீட்டருக்கு மேல் தான் இருக்கிறது. இந்த சூழலில், டிரைவரின் கவனம் சிறிது தவறினாலும் தடுப்புச்சுவரில் மோதி விடுவதோடு எத்தகைய வேகத்தில் அந்த கார் வந்ததோ அந்த அளவு மிகப்பெரிய விபத்தினை சந்திக்க நேரிடும்.

கார் ஓட்டும் போது செல்போன் பேசிக்கொண்டு ஓட்டுவதாலும், அருகில் பயணிப்பவர்களுடன் பேசிக்கொண்டே வருவதாலும் இப்படி சாலையின் தடுப்புச்சுவரில் வாகனங்கள் மோதி விபத்துகள் நடந்து விடுகின்றன. ஒருவரது அஜாக்கிரதையால் மற்றொரு வாகனத்தில் வருவோரும் இன்னுயிரை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே தேசிய நெடுஞ்சாலைகளில் கார் ஓட்டிச்செல்லும் டிரைவர்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து சென்றால் இது போன்ற விபத்தினை தடுக்க முடியும். இப்படி விபத்தினை தடுக்க தேசிய நெடுஞ்சாலைகளில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த போதும் அதனை யாரும் சட்டை செய்வதில்லை.

ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் தங்களையும், இந்த சமுதாயத்தையும் நினைத்து வாகனத்தை இயக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாகும்.

மனித உயிர் என்பது எல்லோருக்கும் ஒன்று தான். விலைமதிப்பில்லா உயிரை விபத்தில் இழக்கக்கூடாது. மண்ணில் பிறந்த எவரும் ஒரு நாள் மரணிக்கப்போகிறோம் தான். ஆனால் அதை நாமே தேடிக்கொள்ளக்கூடாது. அதிலும் கொடூரமான விபத்து மூலம் உயிர் போகக்கூடாது.

எனவே சாலை விபத்தினை தவிர்க்க ஒவ்வொருவரும் உறுதியேற்போம். பாதுகாப்பு பயணத்தை மேற்கொள்வோம்.

-மாயா 

Next Story