ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி பகுதிகளில் புகையிலை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்


ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி பகுதிகளில் புகையிலை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 23 May 2018 10:15 PM GMT (Updated: 23 May 2018 6:26 PM GMT)

ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி பகுதிகளில் புகையிலை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சத்திரப்பட்டி

ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி பகுதிகளில் சமீபத்தில் பரவலாக மழை பெய்தது. இருப்பினும் குளங்கள் முழுமையாக நிரம்பவில்லை. இதனால் குறைந்த அளவு தண்ணீர் தேவைப்படும் பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் புகையிலை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதன்படி கொசவப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, ஓடைப்பட்டி, பி.கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் புகையிலை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். சாகுபடி செலவு, தண்ணீர் தேவை குறைவு என்பதே விவசாயிகளின் புகையிலை சாகுபடி செய்யும் ஆர்வத்துக்கு காரணமாக உள்ளது.

இதற்கு, விவசாய பண்ணைகளில் 30 பைசாவுக்கு நாற்று கிடைக்கிறது. ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் நாற்றுகள் நடவு செய்தால் போதும். 110 நாட்களில் புகையிலை அறுவடை செய்து விடலாம். புகையிலை நன்றாக இருந்தால் விலையும் அதிகமாக கிடைக்கும். அதேநேரம் விலை இல்லாத நேரத்தில் புகையிலையை அறுவடை செய்து, கருப்பட்டி கலந்த நீர் தெளித்து பதப்படுத்தி, விலை உயரும் போது விற்பனை செய்து விடலாம்.

தற்போது இந்த பகுதிகளில் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இங்கிருந்து புகையிலைகள் மருத்துவம் மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கு வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக மும்பைக்கு அதிகளவில் செல்கிறது. கடந்த வருடம் ஒரு செடி ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது.

தற்போது விளைச்சல் அதிகரிப்பு காரணமாக ஒரு புகையிலை செடி ரூ.10-க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story