புதுக்கோட்டையில் ரஜினி ரசிகர்கள் மோதல்; 2 வேன்களின் கண்ணாடி உடைப்பு


புதுக்கோட்டையில் ரஜினி ரசிகர்கள் மோதல்; 2 வேன்களின் கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 7 Jun 2018 11:00 PM GMT (Updated: 7 Jun 2018 6:51 PM GMT)

புதுக்கோட்டையில் ரஜினி ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 வேன்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

புதுக்கோட்டை,

ரஜினி நடித்த ‘காலா’ திரைப்படம் நேற்று காலை வெளியானது. புதுக்கோட்டையில் 2 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ‘காலா’ திரைப்படத்தை பார்க்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதிலும் உள்ள ரஜினி ரசிகர்கள் நேற்று காலை முதலே தியேட்டர்களுக்கு வந்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் உள்ள ஒரு திரையரங்கில் நேற்று மாலை 4 மணி காட்சி பார்க்க வந்த கந்தர்வகோட்டையை சேர்ந்த ரஜினி ரசிகர்களுக்கும், புதுக்கோட்டை வண்டிப்பேட்டையை சேர்ந்த ரஜினி ரசிகர்களுக்கும் இருக்கைகளில் கால் வைப்பதில் மோதல் ஏற்பட்டு சமாதானம் அடைந்தனர். பின்னர் படம் முடிந்ததும் கந்தர்வகோட்டை ரஜினி ரசிகர்கள் ஊர் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது புதுக்கோட்டை மச்சுவாடி அருகே வந்ததும், வண்டிப்பேட்டை ரஜினி ரசிகர்களுக்கும், கந்தர்வகோட்டை ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ரஜினி ரசிகர்கள் வந்த 2 வேன்களின் கண்ணாடிகள் கட்டையால் அடித்தும், கல் வீசியும் உடைக்கப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தினார்கள். மேலும் இந்த மோதலில் யார் யார்? ஈடுபட்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தால் நேற்று இரவு மச்சுவாடி பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. 

Next Story