மத்திய அரசுக்கு சேவகம் செய்யும் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் டி.டி.வி.தினகரன் பேட்டி


மத்திய அரசுக்கு சேவகம் செய்யும் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 7 Jun 2018 10:45 PM GMT (Updated: 7 Jun 2018 7:25 PM GMT)

மத்திய அரசுக்கு சேவகம் செய்யும் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பள்ளப்பட்டியில் டி.டி.வி.தினகரன் கூறினார்.

அரவக்குறிச்சி,

அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டியில் உள்ள ஹாஜி ஹபீப் திருமண மண்டபத்தில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறுபான்மையின நலப்பிரிவு செயலாளர் தம்பிஇஸ்மாயில் தலைமை தாங்கினார். மாவட்ட சிறுபான்மையின நலப்பிரிவு செயலாளர் சாகுல்அமீது வரவேற்றார். கழக அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளருமான வி.செந்தில்பாலாஜி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு நோன்பு திறந்து பேசினார். இதில் மாவட்ட அவை தலைவர் எஸ்.பி.லோகநாதன், அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட்ட மருந்து வணிகர் சங்க தலைவர் பாப்புலர் அபுதாகீர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் முஜிபுர்ரகுமான் நன்றி கூறினார்.

தொடர்ந்து டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா முழுவதும் சிறுபான்மையின மக்களை அச்சுறுத்தும் ஆட்சி நடைபெற்று வருகிறது. குறிப்பாக இஸ்லாமிய மக்களின் முத்தலாக்தடை சட்டம், உச்சநீதிமன்ற தீர்ப்பை காட்டி ஹஜ் பயண சலுகையை ரத்து செய்தது. தமிழகத்தில் பா.ஜ.க.வின் அடிமை ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி எதற்கு எடுத்தாலும் டெல்லி நோக்கி தவம் இருக்கிறார். மத்திய அரசுக்கு சேவகம் செய்து வரும் இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பள்ளப்பட்டிக்கு வரும் ஆளும் கட்சி அமைச்சர்களிடம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைத்த 18 எம்.எல்.ஏ.க்களை ஏன் தகுதி நீக்கம் செய்தீர்கள் என கேளுங்கள். பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகருக்கு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுத்தும் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. அந்த அளவிற்கு பா.ஜ.க.வின் ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பள்ளப்பட்டியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட டி.டி.வி.தினகரன் 2,000 பெண்களுக்கு சேலை, தையல் எந்திரங்களை வழங்கினார். 

Next Story