தேவாலயத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் மனு


தேவாலயத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 7 Jun 2018 10:30 PM GMT (Updated: 7 Jun 2018 7:39 PM GMT)

திருவாரூர் அருகே தேவாலயத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம், லெட்சுமாங்குடியில் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் இந்த தேவாலயத்தில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த தேவாலயத்திற்கு சொந்தமான சவ ஊர்வல வாகனம் உள்ளது. இந்த வாகனத்தை அப்பகுதியில் இறுதி ஊர்வலத்திற்கு ஒரு தரப்பினர் கேட்டுள்ளனர். ஆனால் தேவாலய நிர்வாகம் வண்டியை தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் கடந்த சில நாட்களாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு தரப்பினர் தேவாலயத்திற்குள் புகுந்து கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து கிறிஸ்தவ போதகர்கள் ஐக்கியம் மற்றும் கிறிஸ்தவ நல்லென்ன இயக்க மாவட்ட தலைவர் நாத்தானியேல், மாவட்ட செயலாளர் ஜார்ஜ், மாவட்ட பொருளாளர் அறிவழகன் மற்றும் பொதுமக்கள் நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த மனுவில், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தேவாலயத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தனர். 

Next Story