மேட்டூர் காவிரி ஆற்றின் குறுக்கே தற்காலிக தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்


மேட்டூர் காவிரி ஆற்றின் குறுக்கே தற்காலிக தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 7 Jun 2018 11:00 PM GMT (Updated: 7 Jun 2018 9:21 PM GMT)

மேட்டூர் காவிரி ஆற்றின் குறுக்கே தற்காலிக தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடிநீர் எடுப்பதற்காக இந்த ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேட்டூர்,

மேட்டூர் காவிரி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள செக்கானூர் கதவணை மின்நிலையத்தில் மின் உற்பத்திக்காக 0.5 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது நூறு கோடி கனஅடி) தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதன்காரணமாக மேட்டூர் காவிரி ஆற்றில் செக்கானூரில் இருந்து காவிரி பாலம் வரை தண்ணீர் தேங்கி நிற்கும்.

இதன்மூலம் மேட்டூர் காவிரி ஆற்றின் கரையில் தொட்டில்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேலூர் மாநகராட்சி, சேலம் மாநகராட்சி உள்பட பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கும், மேட்டூர் அனல் மின்நிலையத்திற்கும் தேவையான தண்ணீர் காவிரி ஆற்றில் இருந்து நேரடியாக உறிஞ்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செக்கானூர் கதவணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்காரணமாக இந்த மின்நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு உள்ளது. இதனால் காவிரி ஆறு வறண்டு எங்கு பார்த்தாலும் பாறைகளாக காட்சி அளிக்கிறது.

இதனால் குடிநீர் திட்டங்கள் மற்றும் மேட்டூர் அனல்மின்நிலையம் ஆகியவற்றுக்கு தேவையான தண்ணீர் காவிரி ஆற்றில் இருந்து உறிஞ்சி எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மேட்டூர் காவிரி ஆற்றில் மணல்மூட்டைகள், கற்குவியல்கள் மூலம் தடுப்புகள் அமைக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மேட்டூர் அனல்மின்நிலைய நிர்வாகத்தினர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு தண்ணீரை தடுத்து நிறுத்தி தங்களுக்கு தேவையான தண்ணீரை காவிரி ஆற்றில் இருந்து உறிஞ்சி எடுக்கின்றனர். இதேபோல் குடிநீர் திட்டங்களுக்கு முழுமையான தண்ணீர் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story