என்ஜினீயரிங் மாணவ-மாணவிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி திருச்சியில் தொடங்கியது


என்ஜினீயரிங் மாணவ-மாணவிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி திருச்சியில் தொடங்கியது
x
தினத்தந்தி 8 Jun 2018 11:15 PM GMT (Updated: 8 Jun 2018 7:48 PM GMT)

என்ஜினீயரிங் படிப்பில் சேர ஆன்-லைன் மூலம் கடந்த மே மாதம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். மாணவ-மாணவிகளின் வசதிக்காக 42 உதவி மையங்களை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்படுத்தி இருந்தது.

திருச்சி,

திருச்சியில் பாரதிதாசன் தொழில்நுட்ப கழக வளாகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டிருந்தது. மாணவ-மாணவிகள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தனர்.

என்ஜினீயரிங் படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று முதல் தொடங்கியது. சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் அந்தந்த உதவி மையங்களில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி திருச்சி உதவி மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று தொடங்கியது. முதல்நாளில் 600 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர், உறவினருடன் வந்தனர். மையத்தில் மாணவ-மாணவிகளின் பெயர், விவரம் சரிபார்க்கப்பட்டு, பார்கோடு ஸ்கேன் செய்யப்பட்டது. மேலும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், சாதி சான்றிதழ், பெற்றோர் வருமான சான்றிதழ், முதல் பட்டதாரிக்கான சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல் சரிபார்க்கப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

இதற்காக 80 கணினிகள் அமைக்கப்பட்டு, ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சான்றிதழ்களை நகல் எடுக்கவும், பிரிண்ட் எடுக்கவும் வசதி செய்யப்பட்டிருந்தது. மேலும் மாணவ-மாணவிகளுக்கும், அவர்களுடன் வந்தவர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. பஸ் வசதியும் செய்யப்பட்டிருந்தது.

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பின் மாணவ-மாணவிகளுக்கு என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் கட்டண விவரம் அடங்கிய புத்தகத்தை டீன் செந்தில்குமார் வழங்கினார். சான்றிதழ் சரிபார்ப்பு பணி குறித்து உதவி மைய பொறுப்பாளர் டி.செந்தில்குமார் கூறுகையில், “இந்த பணி வருகிற 14-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்கள் வருவார்கள். நேற்று முதல் நாளில் 420 பேர் வந்திருந்தனர்.

அவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. வராத மாணவர்கள் வருகிற 14-ந்தேதி மதியம் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வரலாம். இ-சேவை மையங்களில் சர்வர் கோளாறால் சான்றிதழ்கள் பெற முடியாதவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு முடிவதற்குள் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களிடம் எந்த சான்றிதழ் இல்லையோ அது பற்றி கணினியில் குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும்“ என்றார்.


Next Story