ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் வழங்குதல் தொடர்பாக மக்கள் குறைகேட்பு கூட்டம் இன்று நடக்கிறது


ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் வழங்குதல் தொடர்பாக மக்கள் குறைகேட்பு கூட்டம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 8 Jun 2018 11:00 PM GMT (Updated: 8 Jun 2018 10:25 PM GMT)

ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் வழங்குதல் தொடர்பாக மக்கள் குறைகேட்பு கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் வழங்கப்படுவதில் உள்ள குறைபாடுகள் குறித்தும், புதிய ரேஷன் கார்டு பெறுவது குறித்தும் மக்கள் குறைகேட்பு கூட்டம் இன்று (சனிக்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் நடக்கிறது. இதில் உயர்நிலை அதிகாரிகள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய உள்ளனர். கூட்டம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.

கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் விவரம் வருமாறு:-

ஈரோடு தாலுகாவுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு குமிளம்பரப்பு ரேஷன் கடையிலும், கொடுமுடி தாலுகாவுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு சுமைதாங்கிபுதூர் கிராம நிர்வாக அலுவலகத்திலும் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. இந்த 2 கூட்டங்களுக்கும் ஈரோடு ஆர்.டி.ஓ. தலைமை தாங்குகிறார்.

மேலும் பெருந்துறை தாலுகாவுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு விஜயபுரி சமுதாய கூடத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி தலைமையிலும், பவானி தாலுகாவுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு கவுந்தப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி தலைமையிலும் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.

கோபிசெட்டிபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு கூகலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்திலும், நம்பியூர் தாலுகாவில் காரப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்திலும் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. இந்த 2 கூட்டங்களுக்கும் கோபி ஆர்.டி.ஓ. தலைமை தாங்குகிறார்.

சத்தியமங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு நொச்சிக்குட்டை சமுதாய கூடத்திலும், தாளவாடி தாலுகாவுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு அரேபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்திலும் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. இந்த 2 கூட்டங்களுக்கும் ஈரோடு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தலைமை தாங்குகிறார். அந்தியூர் தாலுகாவுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு வேம்பத்தி ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி தலைமையிலும், மொடக்குறிச்சி தாலுகாவுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு வடுகபட்டி ரேஷன் கடையில் உதவி ஆணையர் (கலால்) தலைமையிலும் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.

பொது வினியோக திட்டத்தின்கீழ் பொதுமக்கள் குறைதீர்க்கும் இக்கூட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர்கள், தனி தாசில்தார், கூட்டுறவு சங்கங்களின் சார் பதிவாளர், கூட்டுறவு சங்க செயலாளர் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள்.

எனவே பொதுமக்கள், பொது வினியோக திட்ட ரேஷன் கடைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் புதிய ரேஷன் கார்டு பெறுவதில் உள்ள சிரமங்கள் தொடர்பான தங்களது கருத்துகளை வருகைதர உள்ள அதிகாரிகளிடம் நேரில் தெரிவித்தும், மனுக்கள் அளித்தும் அதற்கான தீர்வுகளை பெற்று பயன்அடையலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறி உள்ளார்.

Next Story