அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்


அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2018 11:27 PM GMT (Updated: 8 Jun 2018 11:27 PM GMT)

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நல்லவன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயக்குமார் (வயது 30). இவர், தனது மனைவியின் கருவை கலைக்க திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது பணியில் இருந்து டாக்டர் பவானிக்கும், விஜயக்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த விஜயக்குமார், அந்த பெண் டாக்டரை செல்போனில் புகைப்படம் எடுத்து, அதனை பேஸ்புக் மற்றும் ‘வாட்ஸ் அப்’ போன்ற சமூகவலை தளங்களில் பதிவேற்றம் செய்து அவதூறான மற்றும் ஆபாசமான கருத்துக்களை பதிவு செய்து உள்ளார்.

இதுகுறித்து டாக்டர் பவானி கொடுத்த புகாரின் பேரில் விஜயக்குமாரை திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து விஜயக்குமார் மீது மருத்துவமனை மருத்துவர்கள் பணி பாதுகாப்பு சட்டம் 48-ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பேஸ்புகில் பெண் டாக்டருக்கு எதிராக ஆபாசமான கருத்துக்களை தெரிவித்த 10 நபர்களையாவது போலீசார் உடனே கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று முன்தினம் நோயாளிகள் அவதிப்பட்டனர்.

இதையடுத்து மருத்துவக்கல்லூரி நிர்வாகம் சீனியர் டாக்டர்கள் மூலம் புறநோயாளிகள் பிரிவில் உள்ளவர்களுக்கும், அவசர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் டீன் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், எங்களது கோரிக்கைகள் குறித்து மருத்துவக்கல்லூரி நிர்வாகமும், போலீசாரும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுவரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும். இதுகுறித்து உடனடி தீர்வு காணப்படவில்லை என்றால், டாக்டர்கள் சங்கங்களில் பேசி நாளை (இன்று) முதல் மாநில அளவிலான போராட்டமாக நடத்தப்படும் என்றனர்.

மருத்துவக்கல்லூரி நிர்வாகம் மூலம் புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு போன்றவற்றில் தொடர்ந்து சீனியர் டாக்டர்களை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் மருத்துவக்கல்லூரி டீன் நடராஜனும் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்.

இதுகுறித்து மருத்துவ கல்லூரி டீன் நடராஜன் கூறுகையில், ‘பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது கோரிக்கைகளில் சிலவற்றை மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினாலும், போலீசாலும் உடனடியாக தீர்த்து வைக்க முடியாதவை. இருப்பினும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளும் சீனியர் டாக்டர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Next Story