கிராமங்களில் முழு சுகாதாரத்தை ஏற்படுத்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்


கிராமங்களில் முழு சுகாதாரத்தை ஏற்படுத்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 9 Jun 2018 10:45 PM GMT (Updated: 9 Jun 2018 7:19 PM GMT)

கிராமங்களில் முழு சுகாதாரத்தை ஏற்படுத்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் கணேஷ் அறிவுறுத்தினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்க (ஊரக) திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத நிலையினை அடைய மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது, கிராம பகுதிகளில் சுகாதாரத்தை பேணும் வகையில் மத்திய, மாநில அரசு பங்களிப்புடன் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் தனிநபர் இல்லங்களில் ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டித் தரப்படுகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சி பகுதிகளிலும் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. கிராம பகுதிகளில் பொதுமக்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்தி திறந்த வெளியில் மலம் கழித்தல் பழக்கத்தினை தடுத்து நிறுத்த வேண்டும். தனிநபர் இல்ல கழிப்பறைகளை கட்டி பயன்படுத்துவதையும், கழிப்பறைகள் தொடர் பயன்பாட்டில் உள்ளதையும் அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். கிராமங்களில் முழு சுகாதாரத்தை ஏற்படுத்த அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து வீடுகளிலும் தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊரக பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள கழிப்பறைகளை மாணவர்கள், குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

மேலும் பொதுமக்களிடம் திறந்த வெளியில் மலம் கழித்தலை கைவிட்டு கழிப்பறையை மட்டுமே பயன்படுத்தும் பழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க அலுவலர்கள் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டம் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக தொடர்ந்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், மாவட்ட சமூக நல அதிகாரி ரேணுகா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் புஷ்பகலா, மாவட்ட கல்வி அதிகாரி சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story