தென்மேற்கு பருவமழை தீவிரம்: கர்நாடக கடலோர மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு


தென்மேற்கு பருவமழை தீவிரம்: கர்நாடக கடலோர மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை  ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 9 Jun 2018 10:30 PM GMT (Updated: 9 Jun 2018 9:02 PM GMT)

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக கடலோர மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.

மங்களூரு, 

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக கடலோர மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்த கனமழையால் குமாரதாரா, நேத்ராவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர் கனமழை

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து கேரளா, கர்நாடக கடலோர மாவட்டங்களில் தொடர் கனமழை கொட்டி வருகிறது. கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே கனமழை மங்களூரு நகரை புரட்டிப்போட்டது. வெள்ளத்தில் தத்தளித்த மங்களூரு நகரம், மெல்ல மெல்ல பழைய நிலைக்கு திரும்பி வந்தது.

ஆனால் தற்போதும் மங்களூரு நகரில் கனமழை கொட்டி வருவதால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும், முக்கியமான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல கரைபுரண்டு ஓடுகிறது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் மங்களூரு, பெல்தங்கடி, சுள்ளியா, மூடபித்ரி, புத்தூர் ஆகிய பகுதிகளில் இடைவிடாது கனமழை கொட்டி வருவதால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள்.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

தட்சிண கன்னடா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், குமாரதாரா, நேத்ராவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு வரும் பக்தர்கள், குமாரதாரா ஆற்றில் குளிப்பது வழக்கம். ஆனால், குமாரதாரா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், பக்தர்கள் யாரும் ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் ஏராளமான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்துள்ளன.

சுள்ளியாவில் ராட்சத மரம் சாய்ந்து விழுந்ததில் அந்தப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மங்களூரு–உடுப்பி தேசிய நெடுஞ்சாலையில், கார் ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 3 பேர் லேசான காயமடைந்தனர். இதேபோல மங்களூரு கங்கனாடி பகுதியில் ராட்சத மரம் சாய்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக யாரும் செல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. வனத்துறையினர் அந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

4 பேர் படுகாயம்

மேலும் நேற்று முன்தினம் மாலை மங்களூரு நகரில் உள்ள மங்களாதேவி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த கோவிலில் இருந்த பழமையான ராட்சத மரம் ஒன்று பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாய்ந்து விழுந்தது. இதில், கோவிலில் இருந்த சுரேகா (வயது 63), பிரவீன் சுவர்ணா (49), நவீன் (45), தேஜஸ்வினி (20) ஆகிய 4 பேரும் மரக்கிளைகளுக்கு இடையே சிக்கிக் படுகாயமடைந்தனர். மேலும் ஒரு வாகனமும் சிக்கி சேதமடைந்தது.

இதனை பார்த்து அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து 4 பேரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல, மங்களூருவில் கட்டிடம் ஒன்றும் திடீரென்று இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக கட்டிடத்தின் உள்ளேயும், வெளியேயும் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

உடுப்பி, உத்தரகன்னடா

இதேபோல, உடுப்பி மாவட்டத்திலும் உடுப்பி, குந்தாப்புரா, கார்கலா, பைந்தூர் ஆகிய பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. பைந்தூர், கங்கொல்லி பகுதிகளில் கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. கடற்கரையையொட்டி வசித்து வரும் கிராம மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் உத்தரகன்னடா மாவட்டத்திலும் கார்வார், பட்கல், குமட்டா, ஒன்னாவர் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஒன்னாவர் பகுதியில் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. இதனால் மக்கள் வெளியே வரமுடியாத நிலையில் தவிக்கிறார்கள். கர்நாடக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 நாட்களுக்கு...

கர்நாடக கடலோர மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளன.

மேலும், தட்சிண கன்னடா மாவட்டத்தில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட கலெக்டர் சசிகாந்த் செந்தில் உத்தரவிட்டுள்ளார்.


Related Tags :
Next Story