நிதி நிறுவன அதிபருக்கு மிரட்டல்; முன்னாள் ஊழியர் கைது


நிதி நிறுவன அதிபருக்கு மிரட்டல்; முன்னாள் ஊழியர் கைது
x
தினத்தந்தி 9 Jun 2018 10:00 PM GMT (Updated: 9 Jun 2018 9:02 PM GMT)

நிதி நிறுவனத்தில் கையாடல் மற்றும் கடன் பெற்று மோசடி செய்த ரூ.17 லட்சத்தை நிறுவன அதிபர் திருப்பி கேட்டதால் அவரது அலுவலகத்துக்கு அடியாட்களுடன் சென்று அவருக்கு மிரட்டல் விடுத்த முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை ஐஸ்அவுஸ் பகுதிக்குட்பட்ட செங்கல்வராயன் தெருவில் ஷரின்பாபு (வயது 30) என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் ஏஜெண்டாக புதுப்பேட்டை நாகப்பன் தெருவை சேர்ந்த முரளிதரன் (48) என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை பணி புரிந்தார். பின்னர் அவர் வேலையில் இருந்து நின்றுவிட்டார்.

இந்த நிலையில் நிதி நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை ஷரின்பாபு கடந்த மாதம் சரிபார்த்தார். அப்போது முரளிதரன் நிதி நிறுவனத்தில் ரூ.12 லட்சம் கடன் பெற்று செலுத்தாததும், ரூ.5 லட்சம் கையாடல் செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் உடனடியாக கடன் மற்றும் கையாடல் செய்த பணத்தை திருப்பி செலுத்துமாறு ஷரின்பாபு கூறினார்.

இந்த நிலையில் முரளிதரன் நேற்று அடியாட்கள் 25 பேருடன் நிதி நிறுவன அலுவலகத்துக்கு வந்துள்ளார். அங்கு ஷரின்பாபு மற்றும் ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்து சென்றார்.

இதுதொடர்பாக சென்னை ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தில் ஷரின்பாபு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் ஊழியரான முரளிதரனை நேற்று கைது செய்தனர்.

பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story