போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மனநல மருத்துவ ஆலோசனை கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மனநல மருத்துவ ஆலோசனை கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 10 Jun 2018 9:00 PM GMT (Updated: 10 Jun 2018 6:35 PM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று(திங்கட்கிழமை) முதல் இலவச மனநல மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று(திங்கட்கிழமை) முதல் இலவச மனநல மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்

தூத்துக்குடியில் கடந்த 22–ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, தடியடி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் இறந்த 13 பேருக்கு முதல்–அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.20 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1½ லட்சமும் இழப்பீடு தொகை வழங்கப்பட்டு உள்ளது.

மனநல ஆலோசனை

இந்த போராட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவச மனநல மருத்துவ ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி திரேஸ்புரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் சிவசைலம் தலைமையில் இன்று(திங்கட்கிழமை) முதல் மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.

எனவே பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலோசனை மையத்தில் ஒவ்வொரு வாரமும் அனைத்து நாட்களிலும் (ஞாயிற்றுக்கிழமை தவிர) மதியம் 12 மணி முதல் 2 மணி வரை ஆலோசனை பெற்று பயனலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story