விளாத்திகுளம் அருகே வாக்கி–டாக்கி கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து போலீஸ்காரர் பலி தந்தையின் கண்முன்னே நடந்த பரிதாபம்


விளாத்திகுளம் அருகே வாக்கி–டாக்கி கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து போலீஸ்காரர் பலி தந்தையின் கண்முன்னே நடந்த பரிதாபம்
x
தினத்தந்தி 10 Jun 2018 8:45 PM GMT (Updated: 10 Jun 2018 6:50 PM GMT)

விளாத்திகுளம் அருகே வாக்கி–டாக்கி கோபுரத்தில் இருந்து போலீஸ்காரர் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

விளாத்திகுளம், 

விளாத்திகுளம் அருகே வாக்கி–டாக்கி கோபுரத்தில் இருந்து போலீஸ்காரர் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

சேலத்தை சேர்ந்தவர்

சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியை சேர்ந்தவர் சிபி. இவர் கடலோர பகுதி மீனவர்களுக்கான வாக்கி– டாக்கி சிக்னல் கோபுர அமைப்பு பணிகளை செய்து வருகிறார். அவருடைய மகன் சுரேஷ்குமார் (வயது 28). இவர் சேலம் மாநகர போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் சிபி தூத்துக்குடிக்கு வந்திருந்தார். அவருடன் மகன் சுரேஷ்குமார் விடுமுறையில் இருந்ததால் அவரும் தந்தையுடன் தூத்துக்குடிக்கு வந்திருந்தார்.

நேற்று விளாத்திகுளம் அருகே வேம்பாரில் உள்ள கடலோர பாதுகாப்பு நிலையத்துக்கு பின்புறம் வாக்கி– டாக்கி சிக்னல் கோபுரம் அமைக்கும் பணிகள் நடந்தன. அதற்காக சிபி அந்த கோபுரத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தார்.

கீழே விழுந்து பரிதாப சாவு

அவருடன் சுரேஷ்குமாரும் மேலே ஏறி நின்றார். அப்போது பலத்த காற்று வீசியுள்ளது. இதனால் எதிர்பாராதவிதமாக கோபுரத்தில் இருந்து சுரேஷ்குமார் தவறி கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனை பார்த்து சிபி அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். பின்னர் சுரேஷ்குமாரை உடனடியாக வேம்பாரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது, சுரேஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த சிபி, தனது மகனின் சுரேஷ்குமார் உடலை பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் சூரங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் சுரேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையின் கண் முன்னே வாக்கி– டாக்கி கோபுரத்தில் இருந்து மகன் தவறி விழுந்து இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.


Next Story