விபத்தில் பெண் சாவு: தப்பி சென்றவரை கைது செய்யக்கோரி உடலை சாலையில் வைத்து மறியல்


விபத்தில் பெண் சாவு: தப்பி சென்றவரை கைது செய்யக்கோரி உடலை சாலையில் வைத்து மறியல்
x
தினத்தந்தி 10 Jun 2018 11:00 PM GMT (Updated: 10 Jun 2018 7:34 PM GMT)

திருவட்டார் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றவரை கைது செய்யக்கோரி உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருவட்டார்,

திருவட்டார் அருகே பிலாவிளை ஒருமுறிச்சிவிளை பகுதியை சேர்ந்தவர் சதாசிவன் (வயது 40), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜாண்சிபாய் (37). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10 மற்றும் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

சம்பவத்தன்று இரவு ஜாண்சி பாய் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அவர் பிலாவிளை பகுதியில் வரும்போது, சாமியார்மடத்தில் இருந்து வேர்கிளம்பி நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் ஜாண்சி பாய் படுகாயம் அடைந்தார். உடனே அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் சுங்கான்கடையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர், ஜாண்சிபாயை மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜாண்சிபாய் பரிதாபமாக இறந்தார். நேற்று ஜாண்சிபாய் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.

விபத்து நடந்த போது அங்கிருந்த சிலர், விபத்து ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளின் பதிவெண்ணை பார்த்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால் திருவட்டார் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்றவரை கண்டுபிடித்து கைது செய்யக்கோரியும் தி.மு.க. மேற்கு மாவட்ட பொருளாளர் ஜாண்பிரைட் தலைமையில் ஜாண்சிபாயின் உடலை சாமியார் மடம் சந்திப்பில் வைத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் திருவட்டார் ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் கலை கிரி, விவசாய அணி அமைப்பாளர் ராஜூ உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள். முக்கிய சந்திப்பு பகுதியில் அவர்கள் மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த திருவட்டார் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் தங்கம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேலும், பாதுகாப்பிற்கு தக்கலை போலீசாரும் வந்தனர். பின்னர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 3 நாட்களில் விபத்தை ஏற்படுத்தியவரை கண்டுபிடித்து கைது செய்வதாக போலீசார் உறுதி கூறியதையடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story