பெங்களூருவில் இருந்து கோவைக்கு புறப்பட இருந்த 2 அடுக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கதவுகள் திறக்காததால் பரபரப்பு


பெங்களூருவில் இருந்து கோவைக்கு புறப்பட இருந்த 2 அடுக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கதவுகள் திறக்காததால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Jun 2018 10:30 PM GMT (Updated: 10 Jun 2018 8:44 PM GMT)

பெங்களூருவில் இருந்து கோவைக்கு புறப்பட இருந்த 2 அடுக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கதவுகள் திறக்காததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்

பெங்களூரு, 

பெங்களூருவில் இருந்து கோவைக்கு புறப்பட இருந்த 2 அடுக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கதவுகள் திறக்காததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பணிமனையில் பழுது...

கோவை–பெங்களூரு இடையே முற்றிலும் குளிரூட்டப்பட்ட இரட்டை அடுக்கு கொண்ட உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலை கோவையில் மத்திய மந்திரி, கடந்த 8–ந் தேதி தொடங்கி வைத்தார். அன்று காலை 10.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்ட அந்த ரெயில் திருப்பூர், ஈரோடு வழியாக பெங்களூருவை வந்தடைந்தது. இதில் 104 இருக்கைகளை கொண்ட சி4 என்ற எண் கொண்ட பெட்டி பெங்களூரு ரெயில் நிலையத்தில் 7–வது பிளாட்பாரத்தில் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது.

இதனால் அந்த ஒரு பெட்டியை மட்டும் பெங்களூருவிலேயே கழற்றி விட்டுவிட்டு மற்ற 9 பெட்டிகளுடன் அந்த ரெயில் அன்று மாலை கோவைக்கு புறப்பட்டு சென்றது. தனியாக கழற்றி விடப்பட்ட அந்த சி4 பெட்டி இங்குள்ள பணிமனையில் பழுது பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை கோவையில் இருந்து 9 பெட்டிகளுடன் உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு பகல் 12.40 மணிக்கு பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.

கதவுகள் திறக்கவில்லை

அந்த ரெயிலுடன் பழுது நீக்கப்பட்ட சி4 பெட்டி இணைக்கப்பட்டது. பயணிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் ஏறி அமர்ந்தனர். சி4 பெட்டிக்கான பயணிகள் வந்து அந்த பெட்டியின் கதவை திறக்க முயற்சி செய்தனர். ஆனால் கதவு திறக்கவில்லை. நீண்ட நேரம் முயற்சித்தும் அந்த பெட்டியின் 4 பக்க கதவுகளையும் திறக்க முடியவில்லை. இதனால் அந்த பெட்டிக்குரிய பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த ரெயில் பகல் 2.15 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. நேரம் நெருங்கியதால் பயணிகள் மத்தியல் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதுபற்றி அறிந்ததும் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து அந்த பெட்டியின் கதவுகளை திறக்க முயற்சி செய்தனர். அவர்களின் முயற்சியும் வீண் ஆனது. அந்த பெட்டியின் கதவுகள் திறக்கவில்லை. அந்த பெட்டியில் கதவுகள் உள்பக்கமாக தாழ் போட்டிருந்ததால் கதவுகள் திறக்கவில்லை என்று தெரியவந்தது.

கண்ணாடி தடுப்பு உடைப்பு

இதையடுத்து கோவையில் தென்னக ரெயில்வேயின் முதுநிலை பிரிவு பொறியாளர் எஸ்.ரவிச்சந்திரன் தன்னுடன் வந்திருந்த ஊழியர்களுடன் அந்த கதவை திறக்க முயற்சி செய்தார். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. ரெயில் புறப்படும் நேரம் நெருங்கிவிட்டதால் பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். உடனே எஸ்.ரவிச்சந்திரன், ரெயிலில் 500–க்கும் அதிகமான இருக்கைகள் காலியாக இருப்பதால், சி4 பெட்டிக்குரிய பயணிகள் வேறு பெட்டிகளில் அமர்ந்து கொள்ளலாம் என்று அறிவித்தார்.

பின்னர் அந்த பயணிகள் வேறு பெட்டிகளில் ஏறி அமர்ந்தனர். இதனால் அந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். பின்னர் ஊழியர்கள் சுத்தியலோடு உள்ளே ஏறி சென்று, ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்திற்கு செல்லும் வகையில் இரு பெட்டிகளை இணைக்கும் கண்ணாடி தடுப்பை உடைத்து அந்த பெட்டிக்குள் சென்றனர். அங்கு உள்பக்கமாக போடப்பட்டிருந்த தாழ்பாளை திறந்துவிட்டனர். பின்னர் அந்த ரெயில் 2.20 மணிக்கு கோவைக்கு புறப்பட்டு சென்றது.

உள்பக்கத்தில் இருந்து...

இதுகுறித்து ரெயில்வே ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், “சி4 பெட்டியில் பழுது ஏற்பட்டதால் அது சரிசெய்யப்பட்டது. ஊழியர்கள் தெரியாமல் அந்த பெட்டியின் உள்பக்கத்தில் இருந்து கதவுகளை தாழ் போட்டுவிட்டனர். இதனால் இந்த பிரச்சினை ஏற்பட்டுவிட்டது’’ என்றனர்.


Next Story