தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வினியோகம்


தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வினியோகம்
x
தினத்தந்தி 11 Jun 2018 11:00 PM GMT (Updated: 11 Jun 2018 8:51 PM GMT)

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கும் பணியை கல்லூரி முதல்வர் தொடங்கி வைத்தார்.

ஆண்டிப்பட்டி,

மருத்துவபடிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதனையடுத்து தமிழ்நாட்டில் செயல்படும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் (பல் மருத்துவம்) உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. தேவையான கட்-ஆப் மார்க் எடுத்திருந்த மாணவ-மாணவிகளும், சுயநிதி கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவ-மாணவிகளும் விண்ணப்பங்களை பெற திரளாக வந்திருந்தனர். அவர்களுக்கு விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் பணியை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர். திருநாவுக்கரசு தொடங்கி வைத்தார்.

அப்போது மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் டாக்டர் எழிலரசன், துணை கண்காணிப்பாளர் டாக்டர் இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர். நேற்று முதல் நாளில் 410 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன.

‘நீட்’ தேர்வு முடிவுப்படி அரசு மருத்துவக்கல்லூரிகளிலும், தனியார் சுயநிதி கல்லூரிகளிலும் மருத்துவபடிப்பு மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேரடியாக வந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். சென்னை செலக்சன் கமிட்டி என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.500-க்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து வந்து மருத்துவப்படிப்புகளுக்கான விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளலாம். வருகிற 18-ந்தேதி வரை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகிறது. தினமும் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரையில் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும். பெறப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் முறையாக பூர்த்தி செய்து சென்னை தேர்வு கமிட்டிக்கு 19-ந்தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story