தர்மபுரி, கிருஷ்ணகிரியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி, கிருஷ்ணகிரியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2018 10:45 PM GMT (Updated: 11 Jun 2018 9:42 PM GMT)

தர்மபுரி, கிருஷ்ணகிரியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார்.

இதில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ரத்தினம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கவுரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் புகழேந்தி, மகளிர் அணி துணை அமைப்பாளர் இளவேனில், மாவட்ட துணைத்தலைவர் யோகராசு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள் தொழில்நுட்ப ஊழியர்கள், வாகன டிரைவர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், பகுதிநேர ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 56-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நெடுஞ்செழியன், பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் சிவப்பிரகாசம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மணிவண்ணன், பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் கவிதா, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கேசவன் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், அரசு ஊழியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் திரளாக கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், மாவட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஜாக்டோ - ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ராஜா, பட்டு வளர்ச்சித்துறை மாவட்ட தலைவர் நாகராஜ், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த ஈஸ்வரி, ஜாக்டோ - ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் நடராஜன் ஆகியோர் பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் நிதி காப்பாளர் நாராயணன் நன்றி கூறினார்.


Next Story