கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புகொடி ஏந்தி சங்கு ஊதி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புகொடி ஏந்தி சங்கு ஊதி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2018 11:00 PM GMT (Updated: 11 Jun 2018 9:42 PM GMT)

கோரிக்கைகளை வலி யுறுத்தி கருப்பு கொடி ஏந்தி சங்கு ஊதி சாலை பணியாளர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சந்திரசேனன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கோதண்டபாணி, மாவட்ட துணைத்தலைவர் மலைஇளங்கோவன், மாவட்ட இணை செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து பணப்பலன் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்கிணையான ஊதியம் வழங்க வேண்டும்.

மாத ஊதியம், கருவூலம் மூலம் நிரந்த ஊதிய தொகுப்பில் இருந்து வழங்க வேண்டும்.நெடுஞ்சாலை பராமரிப்பு பணியினை தனியாரிடம் வழங்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். பொள்ளாச்சி, ராமநாதபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், பழனி கோட்ட சாலைகளை தனியார் நிறுவனத்திடம் பராமரிப்பிற்காக விடப்பட்டதை திரும்ப பெற வேண்டும். பணி நீக்க காலத்தில் இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு விதிகளை தளர்த்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பணியாளர்கள் கருப்பு கொடியேந்தி, சங்கு ஊதி தமிழக அரசை எழுப்பும் விதமாக கோஷங்கள் எழுப்பி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் திரவியராஜ் நன்றி கூறினார்.


Next Story