டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு


டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 11 Jun 2018 10:45 PM GMT (Updated: 11 Jun 2018 9:44 PM GMT)

புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாங்காடு கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாங்காடு கிராம பொதுமக்கள் சார்பில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராசு கொடுத்த மனுவில், மாங்காடு கிராமத்தில் டாஸ்மாக் கடை திறப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக மாங்காட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருபிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இதனால் இங்குள்ள கோவில் மண்டபத்தில் திருவிழா, திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடத்த முடியாத அசாதாரண சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் மாங்காடு கிராமத்தில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எனவே மாங்காடு கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி வழங்கக் கூடாது என கூறியிருந்தனர்.

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி தலைவர் திருப்பதி தலைமையில் கட்சி நிர்வாகிகள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அப்பகுதியை உள்ளடக்கிய கிராமங்களின் குடிநீருக்கு ஆதாரமாக உள்ள ஊரணி வாய்க்கால்களில் கலப்பதால் குடிநீர் மூலம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு தோற்றுநோய்கள் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தனர்.

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலம் கிழக்கு சங்கரன் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதிக்கு கூனரி குடியிருப்பில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வறட்சியின் காரணமாக அந்த ஆழ்குழாய் கிணற்றில் குடிநீர் வரத்து குறைந்து விட்டது. இதனால் எங்கள் பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து ஊராட்சி செயலாளரிடம் மனு அளித்து கேட்டபோது, அவர் கூனரி பகுதி பொதுமக்களுக்கே குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது.

எனவே நீங்கள் வேறு ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் பெற்று கொள்ளுங்கள் எனக்கூறினார். இதனால் எங்கள் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, எங்கள் பகுதியில் புதிய ஆழ் குழாய் கிணறு, மின்மோட்டார், மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து எங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

கூட்டத்தில் நரிக்குறவர்கள் சங்கத்தின் தலைவர் நீலயா தலைமையில் நரிக்குறவர்கள் கொடுத்த மனுவில், கந்தர்வகோட்டை தாலுகா வாண்டையான்பட்டி சாலை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருக்கும் குடியிருப்புக்கு இதுவரை அரசு சார்பில் பட்டா வழங்கப்படவில்லை. இதனால் குடிநீர் வசதிகள், மின் இணைப்பு போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம்.

மின்சார வசதி இல்லாததால் பள்ளிக்கு சென்று வரும் மாணவ-மாணவிகள் பள்ளியில் சொல்லி கொடுத்த பாடங்களை வீட்டில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் குடிநீர் இல்லாததால் நாங்கள் தினசரி குடி நீருக்கு அழைந்து திரிய வேண்டிய நிலை உள்ளது. இதனால் எங்களுக்கு உரிய முறையில் மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்க வேண்டும். இது குறித்து பல முறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கூறியிருந்தனர். 

Next Story