பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் கருப்பு கொடி ஏந்தி, சங்கு ஊதும் போராட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் கருப்பு கொடி ஏந்தி, சங்கு ஊதும் போராட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2018 10:45 PM GMT (Updated: 11 Jun 2018 9:44 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி, சங்கு ஊதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

சாலை பராமரிப்பு பணிகளை தனியார் வசம் வழங்குவதை கைவிட்டு, அரசே ஏற்று நடத்த வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து பணப்பலன்களை வழங்க வேண்டும். கருவூலம் மூலம் நிரந்தர ஊதிய தொகுப்பில் இருந்து சாலை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். பணிநீக்க காலத்தில் இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு விதிமுறைகளை தளர்த்தி வாரிசுப்பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர்.

கருப்பு கொடி ஏந்தியும், சங்கு ஊதியும்...

இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரஜினி முன்னிலை வகித்தார். செயலாளர் சுப்ரமணியன் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். போராட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் கைகளில் கருப்பு கொடியை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியவாறும், ஒருவர் சங்கு ஊதியவாறும் ஈடுபட்டனர். இதையடுத்து மாநில செயற்குழு உறுப்பினர் மணிவேல் நிறை வுரையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் கருணாநிதி நன்றி கூறினார். 

Next Story