போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கு: முக்கிய குற்றவாளியான சந்துருஜி மும்பையில் பதுங்கலா? கைது செய்ய போலீசார் தீவிரம்


போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கு: முக்கிய குற்றவாளியான சந்துருஜி மும்பையில் பதுங்கலா? கைது செய்ய போலீசார் தீவிரம்
x
தினத்தந்தி 11 Jun 2018 11:15 PM GMT (Updated: 11 Jun 2018 10:25 PM GMT)

போலி ஏ.டி.எம். கார்டு மோசடியில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியான சந்துருஜி மும்பையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுவையில் பொதுமக்களின் வங்கி கணக்குகளில் இருந்து போலியான ஏ.டி.எம். கார்டுகள் பயன்படுத்தி நூதன முறையில் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் டாக்டர், என்ஜினீயர், அரசியல் பிரமுகர் உள்பட இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் சர்வதேச கும்பலுடன் இணைந்து இந்த மோசடியை அரங்கேற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியாக இருந்த சந்துருஜியை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அவரது இருப்பிடத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் அவருடைய தம்பி மணிசந்தரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் சந்துருஜி பதுங்கி இருக்கும் இடத்தை கேட்டறிந்தனர்.

விசாரணையின் போது மணிசந்தருடன் செல்போனில் தொடர்பு கொண்டு சந்துருஜி பேசி உள்ளார். அப்போது போலீசாருடனும் பேசியதாக தெரிகிறது. முடிந்தால் தன்னை கைது செய்து பாருங்கள் என்று அப்போது அவர் போலீசுக்கு சவால் விட்டுள்ளார்.

இந்த நிலையில் சந்துருஜி மும்பையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் மும்பை விரைந்துள்ளனர். போலீஸ் பிடியில் சிக்கும் போது இந்த மோசடியில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

Next Story