கெய்ல் எரிவாயு குழாயை விவசாய நிலங்களில் பதித்தால் போராட்டம் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எச்சரிக்கை


கெய்ல் எரிவாயு குழாயை விவசாய நிலங்களில் பதித்தால் போராட்டம் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 Jun 2018 11:30 PM GMT (Updated: 11 Jun 2018 10:57 PM GMT)

கெய்ல் எரிவாயு குழாயை விவசாய நிலங்களில் பதித்தால் போராட்டம் நடக்கும் என்று கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

விளைநிலங்கள் வழியாக கெய்ல் எரிவாயு குழாயை பதிக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதியை வழங்கி விடக்கூடாது. தமிழக அரசிடம் அனுமதி கிடைத்ததும் 3 ஆண்டுகளில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி முடிக்கப்படுமென்று கெய்ல் தென்மண்டல செயல் இயக்குனர் அறிவித்திருப்பது கொங்கு மண்டல விவசாயிகளிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கெய்ல் நிறுவனம் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு குழாயின் வழியாக எரிவாயுவை கொண்டு செல்ல திட்டமிட்டு தமிழகத்தில் விவசாய விளை நிலங்களில் குழாய்கள் பதிக்க பணிகள் தொடங்கியது. அப்போது கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 கொங்கு மண்டல மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே விவசாய குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு போராடி கொண்டிருக்கும் சூழ்நிலையில் எரிவாயு குழாயை விளைநிலங்களின் வழியே கொண்டு சென்றால் மேற்கண்ட 7 மாவட்டங்களிலும் விவசாயம் அழிந்து போகும் நிலை உருவாகும்.

இந்த திட்டம் விளைநிலங்கள் வழியாக செயல்படுத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து மாற்று வழியான தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கொ.ம.தே.க சார்பில் விவசாயிகளின் நலனுக்காக கொங்கு மண்டலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறி உள்ளார்.


Next Story