15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டாஸ்மாக்’ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டாஸ்மாக்’ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2018 11:00 PM GMT (Updated: 12 Jun 2018 8:41 PM GMT)

15 அம்ச கோரிக்கைகளை சட்டமன்ற நடப்பு கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

திருச்சி பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன் நேற்று டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. மாவட்ட செயலாளர் மலர்கண்ணன் தலைமை தாங்கினார்.

டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை தமிழக அரசு இறுதிப்படுத்தி பணி மூப்பு அடிப்படையில் ஊழியர்களின் பணியை வரன் முறைப்படுத்தவேண்டும், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்கப்படவேண்டும், உபரி ஊழியர்களுக்கு கல்வி தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையில் அரசு துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள நிரந்தர காலி பணியிடங்களில் மாற்றுப்பணி வழங்க வேண்டும், கடை ஆய்வு மற்றும் தணிக்கைக்கென தனியான வழிகாட்டுதல் விதிகள் உருவாக்கப்படவேண்டும், பணியின்போது மரணமடைந்த ஊழியர்களின் குடும்பத்தாருக்கு வாரிசு வேலை வழங்கவேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு சிறப்பு பணமுடிப்பு வழங்கப்படவேண்டும், நிறுத்தப்பட்ட ஊக்கத்தொகையை நிலுவையுடன் தொடர்ந்து வழங்கவேண்டும், நீண்ட காலமாக பணி மறுக்கப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கோரிக்கைகளை சட்டமன்ற நடப்பு கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின்போது கோஷம் எழுப்பினார்கள். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சம்பத், செயலாளர் பிரகாஷ், தொ.மு.ச.வை சேர்ந்த சிவபெருமான், சீனு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். முடிவில் தொ.மு.ச. மாவட்ட துணை தலைவர் சந்திரசேகர் நன்றி கூறினார். 

Next Story