ரூ.40 லட்சம் பொருட்களுடன் கடத்தப்பட்ட லாரி திருப்பத்தூரில் மீட்பு 2 பேர் கைது


ரூ.40 லட்சம் பொருட்களுடன் கடத்தப்பட்ட லாரி திருப்பத்தூரில் மீட்பு 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 Jun 2018 11:00 PM GMT (Updated: 12 Jun 2018 9:29 PM GMT)

பர்கூர் அருகே ரூ.40 லட்சம் மதிப்புள்ள மிக்சி, குக்கர் உள்ளிட்ட பொருட்களுடன் கடத்தப்பட்ட லாரியை திருப்பத்தூரில் போலீசார் மீட்டனர். பொருட்களை கடத்தியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பர்கூர்,

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). இவர் கடந்த 4-ந் தேதி மும்பையில் இருந்து சென்னைக்கு ரூ.40 லட்சம் மதிப்புள்ள குக்கர், மிக்சி மற்றும் உதிரிபாகங்களை லாரியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். அந்த லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா அங்கிநாயனப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது டிரைவர் சிவக்குமார் சிறுநீர் கழிப்பதற்காக லாரியை சாலை ஓரமாக நிறுத்தினார். அப்போது மோட்டார்சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் சிவக்குமாரிடம், லாரியை மோட்டார்சைக்கிளில் உரசி விட்டு நிற்காமல் சென்றதாக கூறி வாக்குவாதம் செய்தனர். மேலும் அவரை பர்கூர் போலீஸ் நிலையம் வருமாறு கூறினார்கள்.

இதையடுத்து மோட்டார்சைக்கிளில் வந்தவர்களில் ஒருவர் தனது மோட்டார்சைக்கிளின் பின்புறம் சிவக்குமாரை ஏற்றிக் கொண்டு, மற்றொரு நபர் லாரியை ஓட்டிச் சென்றார். பர்கூர் போலீஸ் நிலையம் அருகில் சென்ற போது சிவக்குமாரை கீழே இறக்கி விட்ட நபர் மோட்டார்சைக்கிளில் வேகமாக அங்கிருந்து சென்றார். அதே போல லாரியை ஓட்டிச் சென்ற நபரும், லாரியுடன் மாயமானார்.

பொருட்களுடன் லாரி கடத்தப்பட்டதை உணர்ந்த சிவக்குமார், இது குறித்து மும்பையில் உள்ள லாரியின் உரிமையாளர் நாராயண யாதவிடம் (35) தெரிவித்தார். அவர் இது குறித்து பர்கூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவின் பேரில் பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி, தனிப்படை போலீசார் கோபால்சாமி, சீனிவாசன், வெங்கடாசலம் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

முதல் கட்டமாக சுங்கச்சாவடிகளை லாரி கடந்துள்ளதா? என்று அங்கு பதிவாகி உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்த்தனர். இதில் லாரியின் டிரைவர் சிவக்குமார் குறிப்பிட்ட நேரத்தில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை கடந்து பர்கூருக்குள் வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதில் வேலூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி சுங்கச்சாவடியை லாரி கடக்கவில்லை என தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து திருப்பத்தூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் கண்காணித்தனர். அதில் திருப்பத்தூரை லாரி கடந்தது தெரிய வந்தது. விசாரணையில் அந்த லாரியை வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மட்ரப்பள்ளியை சேர்ந்த சம்பத் என்பவரின் மகன் கொடியரசன் (வயது 25), திருப்பத்தூர் அவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் டில்லிகுமார் (27) ஆகியோர் கடத்தியது தெரிய வந்தது.

அவர்கள் 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாரியும், ரூ.40 லட்சம் மதிப்புள்ள மிக்சி, குக்கர் மற்றும் உதிரிபாகங்களும் மீட்கப்பட்டன. கைதான 2 பேரையும் போலீசார் கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story