ஆட்சி நிர்வாகத்தில் ஊழல் மலிந்து கிடந்தால் அதை குமாரசாமி தடுத்து நிறுத்தட்டும்


ஆட்சி நிர்வாகத்தில் ஊழல் மலிந்து கிடந்தால் அதை குமாரசாமி தடுத்து நிறுத்தட்டும்
x
தினத்தந்தி 13 Jun 2018 12:13 AM GMT (Updated: 13 Jun 2018 12:13 AM GMT)

ஆட்சி நிர்வாகத்தில் ஊழல் மலிந்து கிடந்தால் அதை குமாரசாமி தடுத்து நிறுத்தட்டும் என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை காங்கிரஸ் தலைவரும், கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையா நேற்று மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காங்கிரசில் மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்தவர்கள் தற்போது சரியாகிவிட்டனர். தற்போது யாருக்கும் அதிருப்தி இல்லை. அதிருப்தி அடைந்த எம்.பி.பட்டீல் உள்பட அனைவரிடமும் நான் பேசினேன். காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பலர் பா.ஜனதாவில் சேர தயாராக உள்ளனர் என்று எடியூரப்பா கூறி இருக்கிறார்.

அவருடைய இந்த கருத்துக்கு மதிப்பு கிடையாது. அவர் என்ன பேசுகிறார் என்பது அவருக்கே தெரியாது. பணம் மற்றும் பதவி ஆசை காட்டி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது. பா.ஜனதாவின் இந்த முயற்சி வெற்றி பெறாது. கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் 14-ந் தேதி எனது தலைமையில் நடக்கிறது. அந்த கூட்டத்தில் எந்தெந்த அம்சங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை.

நான் நாளை(இன்று) பெங்களூரு செல்கிறேன். என்ன அம்சங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று ஆலோசித்து முடிவு செய்வேன். கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து ராகுல் காந்தியுடன் நான் இன்னும் பேசவில்லை. இயற்கை மருத்துவ சிகிச்சை உள்பட நிலுவையில் உள்ள வேலைகளை முடித்துவிட்டு நான் டெல்லி செல்ல உள்ளேன்.

மக்களின் தீர்ப்பு எந்த கட்சிக்கும் பெரும்பான்மையாக இல்லாதபோது கூட்டணி ஆட்சி அமைக்கப்படுகிறது. அதன்படி இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்யும். ஆட்சி நிர்வாகத்தில் ஊழல் மலிந்து கிடப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி கூறி இருக்கிறார். ஊழல் மலிந்து கிடப்பதை அவர் எங்கு பார்த்தார் என்று எனக்கு தெரியவில்லை. அவ்வாறு ஊழல் இருந்தால் அதை அவர் தடுத்து நிறுத்தட்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

அவரிடம் நிருபர்கள், காங்கிரஸ் வற்புறுத்தலின் பேரிலேயே தான் முதல்-மந்திரி பதவியை ஏற்றதாக குமாரசாமி கூறி இருப்பது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு சித்தராமையா, “நான் குமாரசாமியிடம் பேசவில்லை. அதனால் அதுபற்றி எனக்கு தெரியாது. மேலும் நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக வெளியான தகவலை ஊடகங்கள் தான் உருவாக்கி இருக்கின்றன“ என்றார். 

Next Story