மீன்பிடி தடைக்காலம் முடிவடைகிறது: மீனவர்கள் நாளை நள்ளிரவு கடலுக்கு செல்கிறார்கள்


மீன்பிடி தடைக்காலம் முடிவடைகிறது: மீனவர்கள் நாளை நள்ளிரவு கடலுக்கு செல்கிறார்கள்
x
தினத்தந்தி 12 Jun 2018 11:15 PM GMT (Updated: 13 Jun 2018 5:51 PM GMT)

61 நாட்கள் கொண்ட மீன்பிடி தடைக்காலம் நாளை முடிவடைகிறது. இதையொட்டி நாளை நள்ளிரவு மீன்பிடிப்பதற்காக மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர்.

சென்னை,

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரையிலான 61 நாட்கள் மீன்களுக்கான இனப்பெருக்க காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இக்காலத்தில் தமிழகத்தில் ஆழ்கடலில் மீன்பிடிக்க (தமிழக கடல்வழி மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983-ம் படி) தடை விதிக்கப்பட்டு வருகிறது. இக்காலத்தில் மீனவர்கள் கரையோர பகுதிகளில் மட்டுமே மீன்பிடிக்க அனுமதி உண்டு.

அந்தவகையில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் காரம்பாக்கத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரையிலான வங்க கடல் எல்லைகளில் இந்த தடை அமலில் உள்ளது. தடையையொட்டி மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. தடைக்காலம் என்பதால் மீனவர்கள் தங்களது பைபர் மற்றும் விசைப்படகுகளை கடல் எல்லைகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால் சென்னை காசிமேடு, கடலூர், நாகை, ராமேசுவரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, முட்டம் உள்ளிட்ட முக்கிய துறைமுகங்களில் ஆயிரக்கணக்கான படகுகள் கடல் எல்லைகளில் நிறுத்தப்பட்டு உள்ளது. தடைக்காலம் அமலில் இருக்கும் காலக்கட்டங்களில் கடற்கரையோரங்களில் வலை பின்னுதல், அறுந்த வலைகளை சீரமைத்தல், படகுகளில் வெடிப்பு ஏற்படாமல் இருக்க சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தடை காலத்தை முன்னிட்டு ஒவ்வொரு மீனவ குடும்பத்துக்கும் தலா ரூ.5 ஆயிரம் உதவித்தொகையாக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. தடைக்காலம் அமலில் இருந்ததால் வெளிமாநில மீன்களே விற்பனைக்கு இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இதனால் மீன்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.

இந்தநிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நாளை யுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. இதையொட்டி நாளை நள்ளிரவு (12 மணிக்கு பிறகு) மீனவர்கள் கடலுக்குள் செல்ல உள்ளனர். 61 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதையொட்டி, அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளனர்.

படகுகளில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பராமரிப்பு பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், படகுகளில் ஐஸ் கட்டிகள் உள்ளிட்ட தேவையான பொருட்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இதனால் மீனவர்கள் புதிய உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். 61 நாட்களுக்கு பிறகு கடலுக்குள் செல்வதால் அதிக மீன்கள் கிடைக்கும் என்று மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர். மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதால் மீன்கள் விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story