ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் - ஜி.கே.வாசன்


ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் - ஜி.கே.வாசன்
x
தினத்தந்தி 13 Jun 2018 11:30 PM GMT (Updated: 13 Jun 2018 8:52 PM GMT)

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

ஈரோடு,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கி உள்ளது. இந்த நேரத்தில் மழைநீர் சேமிப்பு திட்டங்களை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும். நீர்நிலைகளை தூர்வார வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்வழிப்பாதைகளை சீரமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகளில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருகிற 18-ந் தேதி அகில இந்திய அளவில் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் 13 லட்சம் லாரிகள் ஓடாதநிலை ஏற்படும். காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் நிலையை தவிர்க்க, மத்திய-மாநில அரசுகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் இந்த போராட்டம் நடந்து வருகிறது. ஆனால், அவர்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து தமிழக அரசு உடனடியாக பேசி, அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். சுதந்திர நாட்டில் தங்கள் கோரிக்கைகளை போராடி பெற அனைவருக்கும் உரிமை உண்டு. சட்ட ரீதியாக, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் உள்ளிட்ட அனைத்தையும் போராடி பெறும் உரிமை மக்களுக்கு இருக்கிறது. கோரிக்கைகளை சட்டத்துக்கு உட்பட்டு நிறைவேற்ற வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.

அதுபோல் ஆட்சியாளர்கள் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தற்போது மத்திய-மாநில அரசுகள் மக்களுக்கு தேவையான திட்டங்களை தாமதப்படுத்துவதும், கிடப்பில் போடுவதுமாகவும் உள்ளது. அதே நேரம் அநீதியான திட்டங்கள் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன. வருங்கால சந்ததியினரை பாதிக்கும் திட்டங்களை, பொதுமக்களின் உடல் நலனை பாதிக்கும் திட்டங்களை, சுற்றுப்புற சூழலை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்த நினைத்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

பசுமை வழிச்சாலை போன்ற திட்டங்கள் வரும்போது அதனால் ஏற்படும் சாதகங்கள் என்ன? உடனடி பாதகங்கள் என்ன? என்பதை பார்த்து மக்கள் விரும்பும் திட்டமாக நிறைவேற்ற வேண்டும்.

காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தைகள் நன்மை பயக்கவில்லை. சட்டத்தின் மூலம் காவிரி மேலாண்மை வாரியம் என்ற ஒரு வடிவம் கிடைத்து உள்ளது. இந்த ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு சில கோட்பாடுகளை கொடுத்து உள்ளது. ஆனால் கர்நாடக அரசு நீதித்துறைக்கே சவால் விடுவதுபோன்று, இன்னும் ஆணையத்துக்கான உறுப்பினரை நியமிக்கவில்லை. இதில் மத்திய-மாநில அரசுகள் வேடிக்கை பார்க்காமல் விரைந்து தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டும்.

ஈரோடு அருகே உள்ள சித்தோடு சாலை போக்குவரத்து என்ஜினீயரிங் கல்லூரியின் பின்புறம் சர்வதேச தரத்துடன் கூடிய விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

பேட்டியை தொடர்ந்து ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா, மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், பொதுச்செயலாளர் விடியல் சேகர், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.டி.சந்திரசேகர், எம்.செல்வராஜ், பொருளாளர் டி.வி.ஆர்.ஈஸ்வரமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் சி.எஸ்.கவுதமன், ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், இளைஞர் அணி தலைவர் ரமேஷ், சாம்ராட் அசோக் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதுபற்றி த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறும்போது, ‘234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து, கட்சியின் செயல்திட்டங்கள் வகுக்கும் பணி ஈரோடு மாவட்டத்தில் தொடங்கி உள்ளது. தொடர்ந்து அனைத்து தொகுதிகளிலும் இந்த கூட்டம் நடைபெறும்’ என்றார்.

Next Story