கல்குவாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


கல்குவாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Jun 2018 10:45 PM GMT (Updated: 13 Jun 2018 9:31 PM GMT)

பஸ்தலபள்ளி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் நேற்று அங்கு சென்று மலையின் ஒரு பகுதியை தனியார் குவாரிக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளதை கண்டித்தும், பாறைகளை தகர்க்க வெடி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குவாரியை முற்றுகையிட்டு் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பஸ்தலபள்ளி கிராமத்தில் திம்மராய சாமி என்ற மலைக்கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேர்த்திருவிழா மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில்் சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலுக்கு சூளகிரி மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்தும், பெங்களூரு, மாலூர், சந்தாபுரம் போன்ற கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து திம்மராய சாமியை வழிபட்டு செல்கிறார்கள்.

இந்த நிலையில், கோவில் அருகே மலையின் ஒரு பகுதியை, ஒரு தனியார் கல்குவாரிக்கு அரசு சார்பில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பணி தொடங்கும் வகையில் பாறைகளுக்கு வெடி வைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த பஸ்தலபள்ளி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் நேற்று அங்கு சென்று மலையின் ஒரு பகுதியை தனியார் குவாரிக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளதை கண்டித்தும், பாறைகளை தகர்க்க வெடி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குவாரியை முற்றுகையிட்டு் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், இப்பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்படாவிட்டால், சூளகிரி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களை திரட்டி, மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story