நாகர்கோவிலில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றிய ஆய்வு கூட்டம்


நாகர்கோவிலில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றிய ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 13 Jun 2018 10:45 PM GMT (Updated: 13 Jun 2018 9:32 PM GMT)

நாகர்கோவிலில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றிய ஆய்வு கூட்டம் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தலைமையில் நடந்தது.

நாகர்கோவில்,

வார்டு மறுவரையறை மற்றும் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தேர்தல் ஆணையரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான மாலிக் பெரோஸ்கான் தலைமை தாங்கினார். கலெக்டர் பிரசாந்த் வடநேரே முன்னிலை வகித்தார்.

2011 உள்ளாட்சி தேர்தலுக்கு வழங்கப்பட்ட படிவங்கள், கையேடுகள் ஆகியவற்றில் பார்வைக்காக தேவையான அளவு இருப்பு வைத்துவிட்டு, மீதமுள்ள அனைத்து படிவங்கள் மற்றும் கையேடுகளை அழித்து அதற்கான தொகையினை உரிய கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும், அதற்கான அறிக்கை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதா என்பதையும், உள்ளாட்சி தேர்தல் மற்றும் வார்டு மறுவரையறை தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் இருக்கும் வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும், உள்ளாட்சி தேர்தலுக்கென வழங்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், படிவங்கள், கையேடுகள், கட்சியல்லாத பதவிகளுக்கான வாக்குச்சீட்டுகள், வாக்குப் பெட்டிகள் மற்றும் இதர வாக்குப்பதிவு பொருட்களின் இருப்பு, அவற்றின் தேவை ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கான இறுதி கருத்துருவின் அடிப்படையில் ஊரக உள்ளாட்சிக்கு படிவம் 1, 2, 3 மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிக்கு படிவம் 2, 3 ஆகியவற்றை தயார்செய்து சரிபார்த்து குறுந்தகடுடன் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்திற்கு உரிய தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகாத கட்டிடங்களில் வாக்குப்பதிவு பொருட்களை ஒழுங்காக அடுக்கி, பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட வேண்டும். நிலுவையில் இருக்கும் வழக்குகளின் மீது தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி, வழக்கினை முடிவுக்கு கொண்டு வர துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார்.

முன்னதாக அவர் கடந்த 2 நாட்கள் மேல்புறம், திருவட்டார் மற்றும் தக்கலை ஊராட்சி ஒன்றியங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். தக்கலை ஊராட்சி ஒன்றிய ஆய்வின்போது அனைத்து படிவங்கள் மற்றும் கையேடுகளை படிவ எண் வாரியாக ஒழுங்காக வரிசைப்படுத்தி அடுக்கிவைக்க வேண்டுமெனவும், வாக்குப் பெட்டிகளை ஒழுங்காக அடுக்கிவைக்க வேண்டும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுரை வழங்கினார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சாமுவேல், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) மாடசாமி சுந்தர்ராஜ் (பொறுப்பு), உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சையத் சுலைமான், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story