வங்கி மேலாளரிடம் நகை பறித்த கொள்ளையர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வங்கி மேலாளரிடம் நகை பறித்த கொள்ளையர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 13 Jun 2018 11:00 PM GMT (Updated: 13 Jun 2018 9:32 PM GMT)

திருவெறும்பூர் அருகே வங்கி மேலாளரிடம் நகை பறித்த கொள்ளையர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருவெறும்பூர்,

திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்்தவர் கற்பகவள்ளி(வயது48). இவர் கல்லணையை அடுத்த தோகூரில் உள்ள ஒரு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் மொபட்டில்் பணிக்கு செல்வார். கடந்த வாரம் இவர் பணிக்கு சென்றபோது 2 வாலிபர்கள் மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து கற்பகவள்ளியிடம் 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்றனர்.

நகையை பறித்துக்கொண்டு சென்றவர்கள் கிளியூர்அருகே சென்றபோது அந்த கிராமத்து மக்கள் சந்தேகத்தின் பேரில் 2 பேரையும் பிடித்து விசாரித்தபோது அவர்கள் நகையை பறித்துக்கொண்டு தப்பி வந்தது தெரியவந்தது. எனவே அவர்களை பிடித்து திருவெறும்பூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்து 6 பவுன் தங்க சங்கிலியை மீட்டனர்.

கைதான இருவரும் மேலகல்கண்டார்கோட்டையை சேர்ந்தவர்கள் என்பதும் அதில் ஒருவன் பாம்பு பிரவீன் என்கிற பிரவீன்(25). இன்னொருவன் சேகர் மகன் கார்த்திக்(25) என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இருவரும் பல இடங்களில் நகைகள் பறித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர்களை திருவெறும்பூர் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவர்கள் மீது ஏகப்பட்ட வழிப்பறி வழக்குகள் இருப்பதால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் மதன் போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்கிடம் கோரிக்கை வைத்தார்.சூப்பிரண்டு பரிந்துரையை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ராஜாமணி உத்தரவின் பேரில் அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இதற்கான உத்தரவை சிறையில் உள்ள அவர்களிடம் நேற்று ஒப்படைத்தனர். 

Next Story