பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு விருதுநகரை சேர்ந்த பெண்ணை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்


பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு விருதுநகரை சேர்ந்த பெண்ணை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 13 Jun 2018 11:00 PM GMT (Updated: 13 Jun 2018 9:35 PM GMT)

முத்துப்பேட்டை அருகே பெண்ணிடம் நகை, பணத்தை திருடிய விருதுநகரை சேர்ந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மனைவி ஆனந்தவள்ளி (வயது 35). இவர் தனது மகளுடன் நாகப்பட்டினம் சென்றார். பின்னர் முத்துப்பேட்டைக்கு பஸ்சில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து இருந்த ஒரு பெண், ஆனந்தவள்ளி கையில் வைத்திருந்த பையை எடுத்து கொண்டு சங்கேந்தி அருகே பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது ஆனந்தவள்ளி தனது கையில் வைத்திருந்த பையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அப்போது பஸ்சில் தனது அருகில் அமர்ந்து இருந்த பெண் தான் தனது பையை எடுத்து சென்றுள்ளார் என்றும், அதில் 25 பவுன் நகை மற்றும் பணம் இருந்ததாகவும் கூறினார். இதனையடுத்து டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அப்போது பயணிகள் ஆனந்தவள்ளியிடம் பையில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை திருடி சென்ற பெண்ணை தேடினர். இந்தநிலையில் அங்கு பயணிகளை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற பெண்ணை பொதுமக்கள் விரட்டி பிடித்து எடையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விருதுநகரை சேர்ந்த பெண் கைது

போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் விருதுநகர் பாண்டி நகரை சேர்ந்த முருகன் மனைவி வள்ளி (52) என்பதும், ஆனந்தவள்ளியிடம் பையில் இருந்த 25 பவுன்நகை மற்றும் பணம் ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வள்ளியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த நகை, பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story