உதவித்தொகை வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகள் தேர்வு கலெக்டர் தலைமையில் நடந்தது


உதவித்தொகை வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகள் தேர்வு கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 14 Jun 2018 10:45 PM GMT (Updated: 14 Jun 2018 9:37 PM GMT)

மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் உதவித்தொகை வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளை வயது வரம்பு தளர்த்தி உதவித்தொகை வழங்குவதற்காக பயனாளிகள் தேர்வு செய்ய மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வாழ்வில் பின்தங்கிய நிலையிலுள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு சமூகபாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நிதியுதவி மற்றும் உதவி உபகரணங்களை வழங்கி வருகிறது. திட்டத்தில் பயன்பெறாத 18 வயதுக்கு கீழ் உள்ள காது கேளாத, வாய்பேச முடியாத, பார்வை குறைபாடு, பார்வையற்ற, உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட மற்றும் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் நலன் காத்திட ஏதுவாக வயது வரம்பை தளர்த்தி உதவித்தொகை வழங்க தகுந்த அரசு மருத்துவர்களை கொண்டு பரிசோதனைகள் செய்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கலந்து கொண்ட 207 மாற்றுத்திறனாளிகளில் 134 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பட்டியல் அரசுக்கு பரிந்துரை செய்து மாதாந்திர உதவித்தொகை பெற்று வழங்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பாலசுப்ரமணியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, மாவட்ட சமூக நல அலுவலர் வள்ளியம்மை, வட்டாட்சியர்கள் பழனி, முனுசாமி, முருகன், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story