தஞ்சை பெரியகோவில் கோட்டைச்சுவர் சிதிலமடைந்து வருகிறது சீரமைக்க பக்தர்கள் வேண்டுகோள்


தஞ்சை பெரியகோவில் கோட்டைச்சுவர் சிதிலமடைந்து வருகிறது சீரமைக்க பக்தர்கள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 14 Jun 2018 10:30 PM GMT (Updated: 14 Jun 2018 9:40 PM GMT)

தஞ்சை பெரியகோவில் கோட்டைச்சுவர் சிதிலமடைந்து வருகிறது. எனவே அதனை கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முன்பு சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வரும் இக்கோவில் கி.பி.1010-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த கோவில் கட்டப்பட்டு தற்போது ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இங்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, நடராஜர், முருகன் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளும் உள்ளன.

இந்த கோவிலுக்கு நுழையும் இடத்தில் நுழைவு கோபுரமும், அதற்கு அடுத்து கேரளாந்தகன் கோபுரமும், அதற்கு அடுத்து ராஜராஜன் கோபுரமும் உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியில் துறை பராமரிப்பில் இந்த கோவில் இருந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

தஞ்சை பெரிய கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி பெரிய கோவிலில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி பெரியகோவிலில் மேற்கு மற்றும் வடக்கு திருச்சுற்று மாளிகையில் உள்ள சிவலிங்கங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் வடக்கு திருச்சுற்று மாளிகையில் உள்ள கதவும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. ராஜராஜன்கோபுரம் மற்றும் கேரளாந்தகன் கோபுரத்துக்கு இடையே உள்ள பூங்கா பகுதியில் உள்ள புற்கள் அகற்றப்பட்டு புதிய புல்தரை அமைக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக பெரியகோவில் வளாகத்தில் செங்கற்களால் ஆன தரைதளம் சிதிலமடைந்து இருப்பதையடுத்து புதிய தரைதளம் அமைப்பதற்காக பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இதற்கு அடுத்த கட்டமாக பெரிய கோவில் விமான கோபுரம், மழைநீர் தேங்கி பாசி பிடிக்காமல் இருக்கவும், பறவைகள் எச்சம் படிந்து அசுத்தமாகாமல் இருக்கவும் வேதியியல் முறையில் ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யும் பணிகளும் தொடங்கப்பட உள்ளது.

தஞ்சை பெரியகோவிலை சுற்றி அகழியும் உள்ளது. அதன் அருகே பெரிய கோவில் கோட்டைச்சுவரும் உள்ளது. இதில் வலதுபுறம் இருந்த கோட்டைச்சுவர் சிதிலமடைந்ததை தொடர்ந்து அது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. இதேபோல் இடதுபுறம் உள்ள கோட்டைச்சுவர் மிகவும் சிதிலமடைந்து மோசமான நிலையில் காட்சி அளித்து வருகிறது. கோட்டைச்சுவரின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் கோட்டைச்சுவரில் ஓட்டையும் விழுந்துள்ளது. இதேபோல் பெரியகோவிலின் இருபுறத்திலும் உள்ள கோட்டைச்சுவரும் சிதிலமடைந்து காணப்படுகின்றன.

எனவே தஞ்சை பெரிய கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முன்பு கோட்டைச்சுவரை சரி செய்ய வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Next Story