திருப்பத்தூரில் ஆசிரியர் பணியிட மாற்றத்தை கண்டித்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு


திருப்பத்தூரில் ஆசிரியர் பணியிட மாற்றத்தை கண்டித்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
x
தினத்தந்தி 14 Jun 2018 11:14 PM GMT (Updated: 14 Jun 2018 11:14 PM GMT)

திருப்பத்தூரில் ஆசிரியர் பணியிட மாற்றத்தை கண்டித்து மாணவர்கள் வகுப்பை புறக்கணித்தனர். மேலும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ள வேலன்நகரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 137 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் முருகன் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பதவி உயர்வு காரணமாக வாணியம்பாடி தாலுகா ஓமகுப்பம் பள்ளிக்கு செல்ல பணி நியமன ஆணை வந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கல்வி மேலாண்மை குழு தலைவர் பட்டாசு கே.குமார் மற்றும் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர். மேலும் பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, வெளியே அமர்ந்தனர்.

தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தமிழ்செல்வியிடம், ஆசிரியர் முருகனுக்கு இப்பள்ளியிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும், அவர் இங்கேயே பணியாற்ற வேண்டும் என்றும், இல்லையென்றால் எங்களது குழந்தைகளின் மாற்று சான்றிதழ்களை தாருங்கள் என தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் வட்டார கல்வி அலுவலர் உதயசங்கர் நேரில் வந்து, பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அப்பகுதி மக்கள், ஆசிரியர் முருகன் பள்ளி வளர்ச்சிக்கு உதவுகிறார், எஸ்.டி. மாணவ -மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் அவரே வாங்கி தருகிறார், மாணவர்களுக்கு வங்கி கணக்கு ஆரம்பித்தல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகிறார், அவரை இங்கிருந்து பணியிடமாற்றம் செய்ய கூடாது என வலியுறுத்தினர்.

அப்போது உதயசங்கர் கூறுகையில், ஆசிரியர் மாறுதல் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்கப்படும், 3 நாட்கள் கழித்து பிரச்சினை தீர்க்கப்படும் என்றார். அதன்பிறகு மாணவ - மாணவிகள் வகுப்பிற்கு சென்றனர். இதனையடுத்து பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story