ஆண்டிப்பட்டி போலீஸ் குடியிருப்பில் பிணமாக கிடந்த சப்-இன்ஸ்பெக்டர்


ஆண்டிப்பட்டி போலீஸ் குடியிருப்பில் பிணமாக கிடந்த சப்-இன்ஸ்பெக்டர்
x
தினத்தந்தி 15 Jun 2018 12:11 AM GMT (Updated: 15 Jun 2018 12:11 AM GMT)

ஆண்டிப்பட்டி போலீஸ் குடியிருப்பில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிணமாக கிடந்தார்.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட ராஜதானி போலீஸ் நிலையத்தில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ராஜேந்திரன் (வயது 52). அவருடைய மனைவி சண்முகப்பியா (45). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராஜேந்திரன் குடும்பத்துடன் ஆண்டிப்பட்டி போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.

மகன் வெளிநாட்டில் டாக்டருக்கு படித்து வருகிறார். மகள் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில், சண்முகப்பிரியா தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். இதற்கிடையில் நேற்று முன்தினம் பணியை முடித்துவிட்டு ராஜேந்திரன் வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் வீட்டில் உறங்கியதாக தெரிகிறது.

நேற்று காலை சண்முகப்பிரியா தனது வீட்டுக்கு வந்தார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர், ஆண்டிப்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ராஜேந்திரன் ரத்த வாந்தி எடுத்த நிலையில் மயங்கி கிடந்தார்.

இதையடுத்து அவரை மீட்டு போலீசார் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராஜேந்திரனின் சொந்த ஊர் பெரியகுளம் அருகே உள்ள டி.வாடிப்பட்டி ஆகும். இவர் கடந்த 1988-ம் ஆண்டு போலீசாக பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story