எடப்பாடி, மேட்டூரில் பலத்த மழை


எடப்பாடி, மேட்டூரில் பலத்த மழை
x
தினத்தந்தி 16 Jun 2018 11:36 PM GMT (Updated: 16 Jun 2018 11:36 PM GMT)

எடப்பாடியில் நேற்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சுமார் 4 மணியளவில் திடீரென்று பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணிநேரம் பெய்த கனமழையால் தாழ்வான பகுதி மற்றும் சாக்கடை கால்வாய்கள் மழைநீரால் நிரம்பி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

எடப்பாடி,

எடப்பாடி பஸ் நிலைய பகுதியில் மழைநீர் நிரம்பி முழங்கால் அளவுக்கு தண்ணீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். பலத்தமழை பெய்து பூமி குளிர்ந்தால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பிற்பகலில் பலத்த மழை பெய்தது. இதனால் ரோட்டில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழைநீரால் மேட்டூர் ஆர்.எஸ். பகுதியில் சாலையில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் முழங்கால் அளவு தண்ணீர் ஓடியதால் இரு சக்கர வாகனத்தில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

பி.என்.பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகே சுமார் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாகை மரம் ஒன்று அடியோடு சாய்ந்து மின் வயர்களுக்கு சேதம் ஏற்படுத்தியது. மேலும் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் மீதும், 2 இருசக்கர வாகனங்கள் மீதும் மரம் விழுந்து சேதத்தை ஏற்படுத்தியது.

Next Story