ஈரோட்டில் பரபரப்பு: நிறைமாத கர்ப்பிணியை எட்டி உதைத்த டிரைவர், உறவினர்கள் போராட்டம்


ஈரோட்டில் பரபரப்பு: நிறைமாத கர்ப்பிணியை எட்டி உதைத்த டிரைவர், உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 18 Jun 2018 12:00 AM GMT (Updated: 17 Jun 2018 7:59 PM GMT)

ஈரோட்டில் நிறைமாத கர்ப்பிணியை எட்டி உதைத்த டிரைவரை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

தர்மபுரியில் இருந்து ஊட்டிக்கு நிறைமாத கர்ப்பிணியை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று அழைத்து சென்றனர். இதற்காக அவர்கள் தர்மபுரியில் இருந்து ஈரோட்டிற்கு ரெயிலில் வந்தனர். பின்னர் அங்கிருந்து ஊட்டிக்கு பஸ்சில் செல்வதற்காக ரெயில் நிலையத்தில் இருந்து டவுன் பஸ் ஏறி ஈரோடு பஸ் நிலையத்திற்கு சென்றனர். பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசலாக இருந்ததால் அந்த பஸ்சின் அதை நடுவழியில் நிறுத்தினார். இதனால் பயணிகளும் இறங்க தொடங்கினர்.

அப்போது சென்னிமலையில் இருந்து ஈரோட்டிற்கு வந்த மற்றொரு அரசு டவுன் பஸ் பின்னால் வந்து நின்றது. இதனால் அந்த பஸ்சின் டிரைவர் முன்னால் நின்ற பஸ்சின் டிரைவரை எச்சரிப்பதற்காக ஏர்ஹாரனை அழுத்தி கொண்டே இருந்தார். ஆனால் பயணிகள் தொடர்ந்து இறங்கி கொண்டு இருந்ததால் முன்னால் உள்ள பஸ் நின்று கொண்டே இருந்தது. இதில் ஆத்திரம் அடைந்த பஸ்சின் டிரைவர் கீழே இறங்கி வந்தார். மேலும், முன்னால் நின்ற பஸ்சில் இருந்து இறங்கும் பயணிகளை அவர் எச்சரித்தார். அப்போது கர்ப்பிணி பெண்ணும் இறங்கி வந்ததால், டிரைவர் அவரை காலால் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது.

இதைபார்த்த கர்ப்பிணியின் உறவினர்களும், சக பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த டிரைவருக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டனர். உடனடியாக மற்ற டிரைவர்கள், கண்டக்டர்கள் விரைந்து சென்று உறவினர்களையும், பயணிகளையும் சமாதானம் செய்தனர். அதற்குள் கர்ப்பிணியை தாக்கியதாக கூறப்படும் டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது நிறைமாத கர்ப்பிணியின் பெற்றோர் கூறியதாவது:–

நாங்கள் ஊட்டியை சேர்ந்தவர்கள். எனது மகள் சங்கீதாவுக்கு தர்மபுரியில் திருமணம் செய்து கொடுத்து உள்ளோம். அவர் 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். எனவே அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி ஊட்டிக்கு அழைத்து செல்வதற்காக நாங்கள் ஈரோட்டிற்கு வந்தோம். ஈரோடு பஸ் நிலையத்தில் டவுன் பஸ்சில் வந்து இறங்கும்போது பின்னால் வந்த அரசு பஸ்சின் டிரைவர் எங்களது மகளை எட்டி உதைத்தார்.

எனவே அந்த டிரைவரை கைது செய்யும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதற்கு போலீசார், ‘‘புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்ட டிரைவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’, என்று தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ஈரோடு பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story