சேலம் அருகே 8 வழி பசுமை சாலை, விவசாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை


சேலம் அருகே 8 வழி பசுமை சாலை, விவசாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை
x
தினத்தந்தி 20 Jun 2018 12:15 AM GMT (Updated: 19 Jun 2018 9:06 PM GMT)

சேலம் அருகே 8 வழி பசுமை சாலைக்கு நில அளவீடு செய்யும் பணி நேற்று 2-வது நாளாக நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப் பட்டனர்.

அயோத்தியாப்பட்டணம்,

சேலம்-சென்னை இடையே புதிதாக 8 வழி பசுமை சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்படுகிறது. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், தென்னை, மா உள்ளிட்ட மரங்கள் 8 மலைப்பகுதிகள் வழியாக இந்த பசுமை சாலை அமைய உள்ளது. இயற்கை வளம் மற்றும் விவசாய நிலத்தை அழித்து சாலை அமைக்கப் படுவதாக இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படும் பகுதியில் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த எதிர்ப்பு ஒருபுறம் இருக்க, சேலம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 24 கிராமங்களில் சாலை திட்டத்திற்கு நில அளவீடு செய்து எல்லைக்கல் ஊன்றும் பணியை தொடங்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து மாவட்ட எல்லை பகுதியான மஞ்சவாடியில் இருந்து அடிமலைப்புதூர், செட்டியார்காடு, ஆச்சாங்குட்டப்பட்டி வரை நேற்று முன்தினம் அதிகாரிகள் நில அளவீடு செய்து எல்லைக்கல் ஊன்றும் பணியை மேற்கொண்டனர். முன்அறிவிப்பு எதுவும் இன்றி திடீரென போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் ஒரு சில விவசாய நிலங்கள் தவிர்த்து, பெரும்பாலான பயிர்கள் செழித்து வளர்ந்திருந்த விவசாய நிலங்களில் எல்லை அளவீடு கல் ஊன்றப்பட்டது.

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று காலை ஆச்சாங்குட்டப்பட்டியில் இருந்து நில அளவீடு செய்யும் பணியில் நில எடுப்பு தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்கள் 3 குழுக்களாக ஈடுபட்டனர். அவர்கள் ஆச்சாங்குட்டப்பட்டியில் முதல் நாள் அளவீடு செய்த விவசாய நிலங்களில் மேலும் 20 மீட்டர் தூரத்திற்கு கூடுதலாக நில அளவீடு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்கள் நிலத்திற்குள் அனுமதி இன்றி வரக்கூடாது என்று அதிகாரிகளிடம் ஆவேசமாக பேசினர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே இந்த சாலைக்காக சேலம் மாநகராட்சி உதவி பொறியாளர் கலைவாணியின் விவசாய நிலத்தில் நேற்று கூடுதலாக 20 மீட்டர் அளவீடு செய்து 4 ஏக்கர் வரை கையகப்படுத்த இருப்பதாக கூறப்பட்டது. இதனால் அவர் அப்பகுதி விவசாயிகளுடன் அங்கு வந்து நிலம் எடுப்பு தாசில்தார் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அதிகாரிகளிடம் உதவி பொறியாளர் கலைவாணி பேசியதாவது.

‘அரசின் திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை, நாங்கள் கடுமையாக உழைத்து சிறுக, சிறுக சேர்த்த இந்த விவசாய நிலம் தான் எங்கள் உயிராகும். திடீரென ஊருக்கு உள்ளே விவசாய நடுக்காட்டில் சாலை அமைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. நிலம் எடுப்பு குறித்து அதிகாரிகள் விவசாயிகளிடம் முறையாக தெரிவிக்கவில்லை. நாங்கள் கேட்ட கேள்விக்கு உரிய விளக்கம் கூட அளிக்கவில்லை. இங்கு 3 தலைமுறையாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம்.

திடீரென எங்கள் இடத்தில் சாலை அமைப்பது என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. விஷத்தை வேண்டுமானாலும் கொடுங்கள், குடித்து விட்டு படுத்து கொள்கிறோம். எங்கள் மீது சாலைகளை போடுங்கள். நீங்கள் சரியாக அளவீடு செய்யவில்லை. தவறான அளவீட்டை கொண்டு நீங்கள் விவசாய தோட்டத்திற்குள் புகுந்துள்ளர்கள். தோட்டத்தின் வேலியை தாண்டி யாரிடமும் அனுமதி கேட்காமல் புகுந்து கல் போடுகிறீர்கள். நியாயமான அளவீடு செய்து சாலையை போடுங்கள்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாதையை மாற்றி தற்போது ஊருக்குள் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளர்கள். இந்த பாதையை மாற்றியது ஏன்? பல்வேறு கம்பெனிகள், கல்குவாரி, கல்லூரி வழியாக பாதை சென்றதை நிறுத்திவிட்டு ஏழை விவசாயிகள் நிலம் வழியாக சாலை போடுவது நியாயமா? நீங்கள் கள ஆய்வே செய்யவில்லை.’ இவ்வாறு கூறிய கலைவாணி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனால் அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் தாசில்தார் வெங்கடேசன் கூறும்போது, ‘இது முதற்கட்ட ஆய்வு தான். நிலம் எடுப்பின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு கொடுக்கப்படும். மாட்டு கொட்டகையை மாற்றுவதாக இருந்தால் கூட அதற்கான இழப்பீடு தரப்படும். அடுத்த மாதம்(ஜூலை) 10-ந் தேதி இது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது நீங்கள் உங்கள் கோரிக்கை குறித்து முறையிடலாம்’ என்றார்.

அப்போது கலைவாணி குறுக்கிட்டு, ‘உங்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்து வேலையை விட்டு விடு என்றால் விட்டுவிடுவீர்களா?’ என்று அதிகாரிகளை பார்த்து கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய கலைவாணி, ‘மக்களிடம் குறைகளை கேளுங்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மலைப்பகுதியை ஒட்டி சாலையை அமைக்கலாம்’ என்றார்.

முன்னதாக இந்த அளவீடு பணியையொட்டி மஞ்சவாடி பகுதியில் இருந்து குப்பனூர் வரை சேலம் மாநகர உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். நேற்று மாலை குப்பனூர் வரை இந்த அளவீடு பணி தீவிரமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story