ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாய் வெடித்து கச்சா எண்ணெய் வெளியேறியது பொதுமக்கள் அச்சம்


ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாய் வெடித்து கச்சா எண்ணெய் வெளியேறியது பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 21 Jun 2018 11:15 PM GMT (Updated: 21 Jun 2018 6:41 PM GMT)

மயிலாடுதுறை அருகே ஓ.என்.ஜி.சி. நிறுவன எண்ணெய் குழாய் வெடித்து கச்சா எண்ணெய் வெளியேறியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குத்தாலம்,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பாண்டூர் கிராமத்திலும், அருகில் உள்ள பொன்னூர் கிராமத்திலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் 4 எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 4 எண்ணெய் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய், குழாய்கள் மூலம் பாண்டூர் கிராமத்தில் அமைந்துள்ள மற்றொரு பிளாண்ட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ஒரே குழாய் மூலம் குத்தாலம் ஓ.என்.ஜி.சி. பிளாண்டுக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படுகின்றன.

இந்த எண்ணெய் குழாய்கள் விளை நிலங்களில் புதைக்கப்பட்டு, அதன் மூலம் கச்சா எண்ணெய் பிளாண்டுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த நிலையில் நேற்று மயிலாடுதுறை அருகே பாண்டூர் கிராமத்தில் உள்ள ஒரு விளைநிலத்தில் புதைக்கப்பட்ட எண்ணெய் குழாய் திடீரென வெடித்து, அதில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறியது. இதனை கண்ட அந்த நிலத்தின் உரிமையாளர், பாண்டூர் கிராமத்தை சேர்ந்த ராஜதுரை(வயது 50), உடனடியாக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்கள் உடைப்பு ஏற்பட்ட குழாயின் வால்வை அடைத்து, அதில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறாத வகையில் தடுத்து நிறுத்தினர்.

இந்த சம்பவம் அந்தபகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து விவசாயி ராஜதுரை கூறுகையில், இதுபோல ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாய்கள் அடிக்கடி வெடித்து, பொதுமக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதனால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு பயிர்கள் சேதமடைந்து விடுகின்றன. சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீட்டை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கொடுப்பதில்லை. மேலும், இதுபோன்ற சம்பவங்களால் விசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதோடு, அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Next Story