பெங்களூருவில் இருந்து 7,370 புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கோவை வந்தன


பெங்களூருவில் இருந்து 7,370 புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கோவை வந்தன
x
தினத்தந்தி 21 Jun 2018 10:15 PM GMT (Updated: 21 Jun 2018 7:22 PM GMT)

பெங்களூருவில் இருந்து 7 ஆயிரத்து 370 புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 4 ஆயிரம் கட்டுப்பாட்டு எந்திரங்கள் கோவை வந்தன. அவை போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

கோவை,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ‘பெல்’ நிறுவனத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அங்கு தயாரிக்கப்பட்ட 7 ஆயிரத்து 370 வாக்குப்பதிவு எந்திரங்களும், 4 ஆயிரம் கட்டுப்பாட்டு எந்திரங்களும் நேற்று கோவை கொண்டு வரப்பட்டன. இதற்காக கோவையை சேர்ந்த வருவாய் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் பெங்களூரு சென்று அங்கிருந்து 5 கண்டெய்னர் லாரிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை கொண்டு வந்தனர்.

அந்த எந்திரங்கள் நேற்றுக்காலை கோவை ரேஸ்கோர்சில் உள்ள சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அறையில் இறக்கி வைக்கப்பட்டன. மாவட்ட கலெக்டர் ஹரிகரன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் கண்டெய்னர் லாரிகள் திறக்கப்பட்டு புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இறக்கி பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இதுகுறித்து கலெக்டர் ஹரிகரன் கூறுகையில், ‘கோவை வந்துள்ள புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கோவை மாவட்ட தேர்தல் பணிக்காக பயன்படுத்தப்படும். அவற்றிற்கு 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது’ என்றார்.

அப்போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்)ராஜ்குமார், மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் ரவிக்குமார், தாசில்தார் சுந்தரராமன், ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story